திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன?
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற்றுக் கொண்டதுடன், காட்டுமன்னார் கோயில் தொகுதி விசிக வேட்பாளராக காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி இளையபெருமாளை நிறுத்தியிருக்கிறார். இந்த அறிவிப்பு விசிகவில் அதிர்ச்சியையும் காங்கிரசில் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 29 ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விசிக தலைவர் திருமாவளவன். அதன்படி, திருப்போரூரில் பன்னீர்தாஸ், அரக்கோணத்தில் எழில் கரோலின், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பெரியகுளத்தில் ஆற்றலரசு, பண்ருட்டியில் அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சியில் மாலதி ஆகியோரை வேட்பாளராக அறிவித்தார். காட்டுமன்னர்கோவிலில் நானே களமிறங்குகிறேன் என அறிவித்தார் திருமாவளவன்.

புறச் சதிகளில் இருந்து கட்சியையும் கட்சியின் வாக்கு வாங்கியையும் பாதுகாக்க, டெல்லி அரசியலை தவிர்த்து மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்கிற நிர்பந்தம் திருமாவுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்காகத்தான் எம்.பி.யாக இருந்தும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் திருமாவளவன். இந்த அறிவிப்பு, திமுக, விசிக இரு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக அருவித்ததுடன், விசிக காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டிருந்த ஜோதிமணி இளையபெருமாளை விசிக வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் திருமா. தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றும், தமக்கு வாய்ப்பு கொடுத்த திருமாவளவனுக்கு நன்றி என்றும் ஜோதிமணி இளையபெருமாள் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் திமுக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அது குறித்து விசாரித்தபோது, "சட்டமன்றத் தேர்தலில் திருமா போட்டியிடுவதை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்கச் சொல்லியிருந்தார். எ.வ.வேலுவும் விசாரித்துவிட்டு, சில தகவல்களை ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டார்.
இதற்கிடையே, திருமாவின் இந்த முடிவு பற்றி சபரீசனின் பென் நிறுவனமும் சில தகவல்களை முதல்வரிடம் தெரிவித்தது. இதனையடுத்து திருமாவளவனிடம் பேசியிருக்கிறார் முதல்வர். அந்த பேச்சு ரொம்ப நேரம் நீடித்துள்ளது. இதனையடுத்துதான், போட்டியிடுவதிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் திருமாவளவன்" என்கிறார்கள்.
போட்டியிலிருந்து விலகிய நிலையில், விசிகவை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் தந்திருப்பது விசிக தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஜி. கே. மணியின் மகன் தமிழ் குமரனை காங்கிரசில் சேர்க்க வைத்து சீட் ஒதுக்கப்பட்டத்தில் திமுக ரோல் எப்படி மறைமுகமாக செயலாற்றியதோ, அதேபோல விசிக விஷயத்திலும் நடந்துள்ளது என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications