சென்னை.. சுவர் விளம்பரத்திற்காக திமுக-பாஜகவினர் அடிதடி.. திமுக வட்டச் செயலாளர் சிறையிலடைப்பு
சென்னை.. சுவர் விளம்பரத்திற்காக திமுக-பாஜகவினர் அடிதடி.. திமுக வட்டச் செயலாளர் சிறையிலடைப்பு
சென்னை: சுவரில் கட்சி விளம்பரத்தை அழித்ததால் பாஜக- திமுகவினரிடையே பெரும் மோதல் வெடித்த நிலையில், திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வட்ட செயலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை நங்கநல்லூர், வோல்டாஸ் காலனியில் பாஜகவினர் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
மோடியின் பிறந்தநாள் 17ம் தேதி முடிவடைந்ததால், சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு திமுக கட்சியின் விளம்பரத்தை எழுதினர்.

தகராறு
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் திமுகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்தனர். இதன் காரணமாக பாஜக மற்றும் திமுகவினர் ஏராளமானோர் ஒன்று கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு திமுக மற்றும் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

தாக்குதல்
பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலந்தூர் பகுதி செயலாளர் சந்திரன் பேசிக் கொண்டு இருக்கும் போதே 167 வார்டு திமுக வட்ட செயலாளர் நடராஜ் என்பவர் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு வந்து பாஜகவை சேர்ந்த பெண்கள் மீது மோதி தாக்கினார் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

கைது நடவடிக்கை
பாஜகவினரும் எதிர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் திமுக வட்ட செயலாளரை கைது செய்தனர். திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலை அனைவரையும் விடுவித்தனர்.

நான்கு பிரிவுகளில் வழக்கு
சம்பவம் தொடர்பாக, பழவந்தாங்கல் போலீசார் பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி மீனாட்சி மற்றும் சரஸ்வதி ஆகியோரை இருசக்கர வாகனம் கொண்டு மோதிவிட்டு தாக்கிய திமுக வட்ட செயலாளர் நட்ராஜ் மற்றும் அவரை தூண்டிய ஆலந்தூர் பகுதி செயலாளர் சந்திரன் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல், தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வட்ட செயலாளர் நட்ராஜ்ஜை ஆலந்தூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

போராட்டம்
மீனாட்சி மற்றும் சரஸ்வதி இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கண்டித்து, பாஜக சென்னை கிழக்கு மாவடட துணை தலைவர் சீதாராமன் தலைமையில் நீலாங்கரையில் சாலை மறியல் போராடம் நடத்தினர்.
அதே போல் பாஜகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications