"திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது".. நோன்பு நிகழ்வில் உதயநிதி உறுதி!
சென்னை: "திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது நமது திராவிட மாடல் அரசு தான். சிறுபான்மை மக்கள் நலன் பற்றி கவலையில்லாமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை புதுக்கல்லூரியில் திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது நமது திராவிட மாடல் அரசு தான். ஆட்சிக்கு வந்தவுடன் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பத்து தர்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலமாக்களின் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது திராவிட மாடல் அரசு தான்" எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் என்றும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். நமக்குள் இருப்பது சகோதர பாசம். எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் தி.மு.க-வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுப்பது தி.மு.க தான். குறிப்பாக 2019ல் மத்திய பா.ஜ.க அரசு சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்தபோது அதை எதிர்த்தது தி.மு.க தான். திமுக என்னறைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நிற்கும். திமுக இருக்கும் வரை பா.ஜ.க-வின் எந்த திட்டமும் தமிழ்நாட்டில் நிச்சயம் எடுபடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications