“அப்பாவ பத்தி வர்ற தகவலை நம்பாதீங்க..” ஆர்எஸ்எஸ் வீடு கட்டிக் கொடுத்துச்சா?குமரிமுத்து மகள் மறுப்பு!
சென்னை: தமிழ் திரையுலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் குமரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர் 30 ஆண்டு காலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
2016ல் குமரிமுத்து காலமான நிலையில், அவரது குடும்பத்தினர் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குமரிமுத்துவின் மகள் எலிசபெத் குமரிமுத்து, தனது அப்பா பற்றி இப்போது பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என விளக்கமளித்துள்ளார்.

விவேக் சாலை
சமீபத்தில் நடிகர் விவேக் வசித்த வீடு உள்ள சாலைக்கு 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' எனப் பெயர் சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து சாலையின் பெயரை மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விவேக் குடும்பத்தினரின் வேண்டுகோளை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றிய நிலையில், இதுதொடர்பாக தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவுக்கும் நெருக்கமானவராக இருந்த விவேக்கிற்கு அரசு இவ்வளவு செய்வது தேவையா எனக் கேள்வி எழுந்தது.

குமரிமுத்து
மேலும், தி.மு.க தொண்டராகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டளைப்படியும் வாழ்ந்து மறைந்த நடிகர் குமரிமுத்து வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் தி.மு.க அவருக்கு ஒரு மரியாதையும் செய்யவில்லை. சந்தர்ப்பவாதிகளுக்குத்தான் இங்கு மரியாதை கொடுக்கப்படுமா என்றும் உடன்பிறப்புகள் பொங்கினர்.
தேர்தல் காலங்களில் கருணாநிதி சொல்லும் திட்டப்படி பிரச்சார நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் பங்கேற்பவர் குமரிமுத்து என்பதால் அவரது குடும்பத்தினருக்கு தி.மு.க சார்பில் உதவி வழங்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.

தலைமைக்கு கேட்கும்
இதையடுத்து குமரிமுத்துவின் மகள் எலிசபெத் குமரிமுத்துவிடம், "நீங்களும் குமரிமுத்து அவர்களுக்காக முதலமைச்சரிடம் ஏதாவது கோரிக்கை வையுங்கள். மாம்பலம் பகுதியில் உள்ள சாலைக்கு குமரிமுத்து பெயர் வைக்க வேண்டுகோள் விடுங்கள். தி.மு.க தொண்டனுக்கு மரியாதை கிடைத்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி" என உடன்பிறப்புகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அதற்கு குமரிமுத்துவின் மகள் எலிசபெத் குமரிமுத்து, "அப்பா உண்மையாக கட்சிக்காக உழைத்தது அனைவருக்கும் தெரியும். அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும் தெரியும். நம் குரல் தலைமைக்கு கேட்கும். காத்திருப்போம்" எனத் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை நிர்வாகிகள் தி.மு.க தலைவர் காதிலும் போட்டு வைத்துள்ளனர்.

நம்பாதீங்க
இந்த விவகாரத்தையடுத்து மற்றொரு செய்தி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அதில், குமரிமுத்துவை படிக்க வைத்து, அவருக்கு உதவிய அவரது அண்ணனுக்கு குமரிமுத்து உதவ முன்வரவில்லை என்றும், அவருக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் வீடு கட்டிக் கொடுத்ததாகவும் சில தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலிசபெத் குமரிமுத்து, "அப்பாவைப் பற்றியும், அவரது சகோதரர்கள் பற்றியும் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். சந்தேகம் இருந்தால் என்னிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications