அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் .. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அப்படிப்பட்ட அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழையனூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்ற இளைஞர் ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அவர் கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருடைய நண்பர்களுக்கு கடனை திருப்பிச்செலுத்தாதவர் என்று எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது அந்த ஆப் நிறுவனம் இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு இளைஞர் விக்னேஷ்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து ஆன்லைன் ஆப் மூலம் கடன் தந்து மக்களை ஏமாற்றி மிரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் ரிசர்வ் வங்கிக்கு வந்தததையடுத்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என அறிவித்துள்ளது.