"தரையில் விழுந்து புரண்டு".. அங்கே பொதுக்குழு.. இங்கே அதிமுக ஆபிசில் என்ன நடந்தது? கலங்கிய ஓபிஎஸ்!
சென்னை: அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிலையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அங்கு பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு, செயற்குழு தற்போது சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்ளே சென்றனர்
அங்கே அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இடையில் இங்கே ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்றார். அதிமுக அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வருவார் என்பதை அறிந்து இன்று காலையே எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அங்கே நிறுத்தி இருந்தார். இதனால் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு நிர்வாகிகள் மோதிக்கொண்டனர்.

ஆலோசனை
கடைசியில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்டு இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கடும் மோதலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் உள்ளே சென்றனர். உள்ளே ஓபிஎஸ் சென்ற 5 நிமிடத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான தகவல் உடனே ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் உடனே ஆலோசனை மேற்கொண்டார்.

பொதுக்குழு பற்றி அப்டேட்
அடுத்து என்ன செய்வது, சட்ட ரீதியாக என்ன போராட்டங்களை மேற்கொள்வது என்று ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்த படியே ஆலோசனை செய்தார். அதோடு இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பான அப்டேட்கள் உடனுக்குடன் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டது.

உருண்டு புரண்ட நிர்வாகிகள்
அதிமுக அலுவலகத்தில் இருந்த படியே பொதுக்குழு குறித்த விவகாரங்களை ஓ பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதை தெரிந்து கொண்டு ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்தில் கதறி கோஷமிட்டனர். மோசம் செய்துவிட்டனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொண்டர்கள் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குத்தான் என்று கூறி ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் உருண்டு, புரண்டு கோஷம் எழுப்பினார்கள்.

கலங்கினார்
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் கலக்கமான முகத்துடன் காணப்பட்டார். அவர் காலையில் கடுகடுப்புடன் இருந்த நிலையில்.. அதிமுக அலுவலகத்தில் கொஞ்சம் சோகமான முகத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவை இழந்த ஓ பன்னீர்செல்வம், தற்போது சட்ட ரீதியாகவும் ஆதரவை இழந்துள்ளார். இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் கலக்கமான முகத்தோடு காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications