நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
சென்னை: உங்களது நிலத்தின் பட்டா தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம்? பழைய பட்டாவுக்கு பதிலாக, புதிய பட்டாவை பெறுவது எப்படி தெரியுமா? ரொம்ப சிம்பிள்.
பட்டாக்கள் என்பது மிக மிக முக்கிய ஆவணமாகும்.. வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமான ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறை மூலம் வழங்கப்படுகிறது..

பட்டா மாறுதல்: இந்த பட்டாவில், வீடு உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். எனவே, குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டுக்கு பட்டா என்பது மிக முக்கியம் என்பதுடன், வங்கி கடன் உள்ளிட்ட இதர காரணங்களுக்காகவும் பட்டா அவசியமானதாக உள்ளது.
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.. பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் சமீபத்தில் தொடங்கி வைத்திருந்தார்.
என்ன செய்ய வேண்டும்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை எதிர்பாராதவிதமாக, பட்டா தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதற்கு மறுபடியும் விண்ணப்பம் செய்து, டூப்ளிகேட் என்ற நகல் பட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகம் சென்று, அலுவலக அதிகாரிகளை அணுகி , இதுகுறித்து விண்ணப்பிக்க வேண்டும்.. அத்துடன் காணாமல்போன பழைய பட்டாவின் ஜெராக்ஸ் நகல் அல்லது பட்டா எண் உள்ளிட்ட இதர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. பிறகு, குறிப்பிட்ட வங்கியின் மூலம் நகல் பட்டா பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.
நகல் பட்டா: இந்த நகல் பட்டாவுக்கான விண்ணப்பத்தை அளித்தபின்னர், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர்கள் முறையான விசாரணையை மேற்கொள்வார்கள்.
அதற்கு பிறகு உங்கள் மனு மீது ஒப்புதல் பெறவேண்டும். அனைத்து அலுவலக நடைமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு நகல் பட்டா அளிக்கப்படும்.. சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் அடிப்படையில், இந்த பட்டாவின் புதிய பிரதி உங்களுக்கு வழங்கப்படும்.
பெயர் மாற்றம்: எனினும், பழைய பட்டாவை உங்களின் பெயருக்கு உடனே மாற்றி வைத்து கொள்வதுதான் சிறந்தது.. இல்லாவிட்டால், அந்த நிலம் பழைய உரிமையாளர் பெயரிலேயே இருக்கும்... இதனால், பின்னாளில் அவர்களுடையது என்று உரிமை கோரவும் அவர்களால் முடியம். அதனால் வாங்கும்போதே உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வது சிக்கல்களை ஏற்படுத்தாது.












Click it and Unblock the Notifications