இப்படித்தான் போன வருஷமும் அமளியான அவை.. பெரியார், அம்பேத்கர் பெயரை "ஸ்கிப்" செய்தார் ஆளுநர் ரவி!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை முழுவதுமாக புறக்கணித்த நிலையில் கடந்த ஆண்டு சில வார்த்தைகளை மட்டும் அவர் படிக்காமல் புறக்கணித்திருந்தார். அவை எந்தெந்த வார்த்தைகள் என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக நாடாளுமன்ற, சட்டசபை கூட்டத் தொடரின் போது குடியரசுத் தலைவர் உரைகளும், ஆளுநர் உரைகளும், மத்திய மாநில அரசுகள் எழுதி கொடுத்து அதை அவர்கள் வாசிக்கும்படியாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநர் உரை தொடங்கியது. அவர் தமிழக அரசின் முழு உரையை படிக்காமல் ஒரு நிமிடத்தில் தனது உரையை முடித்துவிட்டார். இதனால் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு படித்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டும் ஆளுநர் உரையின் போது தமிழக அரசின் முழு உரையில் சில வார்த்தைகளை அவர் படிக்காமல் விட்டுவிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அதாவது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது உரை வாசித்து முடித்ததும் அதன் தமிழாக்கத்தை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முறையாக வாசிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என தெரிவித்து தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார். அப்படி ஆளுநர் படிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். அவர் படிக்க மறுத்த வார்த்தைகள் உரையின் 65 ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பத்தியில் இருந்த வார்த்தைகள் பின்வருமாறு:
- சமூகநீதி
- சுயமரியாதை
- அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்
- பெண்ணுரிமை
- மதநல்லிணக்கம்
- பல்லுயிர் ஓம்புதல்
- பெரியார்
- அண்ணல் அம்பேத்கர்
- பெருந்தலைவர் காமராசர்
- பேரறிஞர் அண்ணா
- முத்தமிழறிஞர் கலைஞர்
- திராவிட மாடல் ஆட்சி
ஆகியவற்றை ஆளுநர் ரவி படிக்க மறுத்துவிட்டார். மேலும் தமிழகம் அமைதிப்பூங்கா என்ற வார்த்தையையும் ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசித்த போது ஆளுநர் வாசிக்காமல் விட்ட அனைத்து வார்த்தைகளையும் வாசித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசின் முழு உரையையும் ஆளுநர் ரவி படிக்காமல் புறக்கணித்துவிட்டார். அரசின் உரையில் ஏற்கத்தக்க அம்சங்கள் இல்லை என கூறி உரையை வாசிக்க மறுத்துவிட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் உரையை முழுவதுமாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது இதுவே முதல் முறையாகும்.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் கேரள மாநில சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது கேரள அரசு எழுதி கொடுத்த மாநில கொள்கை விளக்க அறிக்கையை ஆளுநர் ஆரிப் கான் படிக்காமல் முழுவதுமாக புறக்கணித்துவிட்டு வெறும் 1.17 நிமிடங்கள் மட்டுமே படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications