ஊரகப்பகுதி காவல் நிலையங்களில் தினுசான பஞ்சாயத்துகள்! எல்லாமே ''அண்டர் ஸ்டேண்டிங்''!
சென்னை: போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தால், உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக பல இடங்களில் பேசி தீர்த்துக்கலாம் என நவீன கட்டப்பஞ்சாயத்துக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
வழக்குப் பதிவு செய்தால், நீதிமன்றத்துக்கு அதன் விவரத்தை அனுப்பி சார்ஜ் சீட் ஃபைல் செய்து இன்னும் பல ஃபார்மாலிட்டிகளை பின்பற்ற வேண்டும் என்பதால், எதற்கு இந்த ரிஸ்க் என்ற மனநிலையில் தான் பல காவல் ஆய்வாளர்களும், உதவி காவல் ஆய்வாளர்களும் உள்ளனர். வாங்க பேசலாம், வாங்க பழகலாம் என்ற சாலமன் பாப்பையா வசனத்தை போல் வாங்க பேசிக்கலாம் எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவதிலேயே பல இடங்களில் குறியாக உள்ளார்கள்.

இன்னும் குறிப்பாக இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஊரகப்பகுதி காவல் நிலையங்களில் தான் இது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் நடக்கின்றன. எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர்கள் பலரும் ஐபிசி செக்ஷன்களே தெரியாமல் தடுமாறும் பரிதாப நிலைமையை கண்கூடாக காண முடிகிறது. நேரடியாக பரீட்சை எழுதி தேர்வாகி டி.எஸ்.பி. ஆனவர்கள் பெரும்பாலும், அனுபவின்மை காரணமாக எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் சொல்வதை அப்படியே முழுமையாக நம்பிக் கொள்கின்றனர். இதன் விளைவு காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார் அளித்தவர்கள் தரப்பு பொறுத்தது போதும் என சாலை மறியல், அடிதடி, என இறங்கி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும்.
அதேபோல் கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினால் அரசு வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் செல்ல வேண்டும். இந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கினால் இன்னென்ன பிரச்சனைகள் வரும், இன்னென்ன தவறுகளை செய்துள்ளார் என்பதை எல்லாம் ஸ்டேஷன் தரப்பிலிருந்து அரசு வழக்கறிஞருக்கு ஆழமாக, அழுத்தமாக எடுத்துச்சொல்ல வேண்டும். ஆனால் அந்த நடைமுறை முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இதன் விளைவு பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களை சார்ந்த சுற்றத்தாரும் அரசு மீது கோபம் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படி பார்த்தால், இது தேர்தலின் போது குறைந்தபட்சம் சுமார் 5% வாக்குகளையாவது ஆளுங்கட்சிக்கு எதிராக திருப்பக் கூடும். இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத விளைவு தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அடித்தளமாக அமைகிறது.
இதனிடையே மற்ற மண்டலங்களை காட்டிலும் தென் மண்டலத்தை பொறுத்தவரை செயல்படாத எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.க்கள் மீது சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார் ஐஜி கண்ணன் ஐ.பி.எஸ். அதேபோல் அதிரடி ஆக்ஷன்களையும், மாற்றங்களையும் துறை ரீதியாக எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார் மீது உண்மை முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வேண்டுமென்றே சாக்குபோக்குகளை சொல்லி தட்டிக்கழித்த காவல் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications