தப்பித் தவறியும் அமித்ஷா அவர் பேரை சொல்லலயே? அதுவிடுங்க திருச்சியில் எடப்பாடி பழனிசாமி மாஸ் பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக இணைந்த தேஜ கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறினார். அவரது பேச்சில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் அதிமுகவுக்குள் பரபரபத்து கிடக்க, இன்று தன்னுடைய அடுத்தக்கட்ட சுற்றுப்யணத்தை துவங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசியல் பரபரத்து காணப்படுகிறது.. கூட்டணி பேச்சுவார்த்தைளையும் தாண்டி, தங்களது தனித்தன்மையை நிரூபிக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

திமுக - விஜய்
அந்தவகையில், திமுகவும் தயாராகி வருகிறது. விஜய் தலைமையில் தவெகவின் வருகை ஒருபுறம் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தாலும் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி என்பதை அழுத்தி சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக இணைந்து போட்டியிட உள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை துவக்கி நடத்தி வருகிறார்.. செல்லுமிடமெல்லாம் திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார்.
எடப்பாடி பெயரை கூட சொல்லல
ஆனால், பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வரும் நிலையில், நேற்று நெல்லை வந்த அமித்ஷா மீண்டும் பாஜக, அதிமுக கட்சிகள் இணைந்த தேஜ கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உறுதிபடக்கூறினார்.. ஆனால், முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி பெயரையே குறிப்பிடாததும் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று திருச்சி சுற்றுப்பயணம்
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் புறப்பட்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று அங்கு ஓய்வு எடுக்கிறார்.
இதுதான் எடப்பாடி பிளான்
பிறகு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு அவர், ஓட்டலில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்கிறார்.
அதன்பிறகு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திமார்க்கெட் மரக்கடை அருகே மாலை 5.30 மணிக்கு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து அவர் லால்குடிக்கு சென்று அங்கு இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்கிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்..
மணப்பாறை - திருச்சி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்வதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் கொடி, தோரணங்கள், அலங்கார வளைவுகள், பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications