அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? அமைச்சர் விளக்கம்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? என்றும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜியை, விக்னேஷ்வரன் என்ற வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்கு உரிய சிகிச்சையை வழங்கவில்லை என்ற ஆத்திரத்தில் மருத்துவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிண்டி மருத்துவரை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வராதது ஏன்? என்றும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றியும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
24 மணி நேரமும் இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் தான் உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வருகிறார்கள். தனியாக வந்த ஒருத்தர் டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். யாரும் ஓபி சீட் இல்லாமல் வர முடியாது. அவரோட அம்மாவுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் தொடர்ச்சியாக இங்கே வந்து பழக்கப்பட்டு இருக்கிறார்.
அதனால் தான் மற்றவர்கள் கூட இவர் இங்கு வரக்கூடியவர் தானே என்று விட்டு இருக்கிறார்கள். அப்போது டாக்டரின் ரூமுக்கு சென்று கத்தியால் குத்தியிருக்கிறார். நான் பள்ளிக்கரணையில் ஒரு ஆய்வில் இருந்தபோது என்னிடம் இது பற்றி சொன்னாங்க.. முதலில் வடநாட்டு இளைஞர் என்று சொன்னாங்க.. அப்படியெல்லாம் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவரது பெயர் விக்னேஷ்வரன்.
இப்போது காவல்துறை கட்டுப்பாட்டில் தான் விக்னேஷ்வரன் உள்ளார். இனிமேல் தான் அவரிடம் விசாரிக்க உள்ளோம். அவரது அம்மாவுக்கு சரியான சிகிச்சை கொடுக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக கொடுக்கப்படுகிறது. விக்னேஷ்வரனின் அம்மாவுக்கும் மருத்துவர் சொன்ன மாதிரி 6 ஹீமோதியாரெபி கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கிற எந்த டாக்டரும் சிகிச்சை அளிப்பதில் வஞ்சனம் பண்ண மாட்டாங்க..
இங்கே எல்லா மருத்துவரும் சிறப்பான சிகிச்சையை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் கூட இந்த டாக்டர் பாலாஜி மீது நல்ல பெயர் உள்ளது. யாரோ தவறுதலாக அந்த இளைஞரிடம் சொல்லியிருக்கிறார்கள். வெளியில் உள்ள மருத்துவர் யாரோ இந்த சிகிச்சை சரியாக செய்யவில்லை என்று அவரிடம் தவறுதலாக சொல்லியிருக்கலாம். அதனை தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications