வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது! சென்னையில் விலை என்ன?
சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மீது ரூ 50 விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சென்னையில் 14 கிலோ எடை கொண்ட ஒரு மானிய விலை சிலிண்டரின் விலை ரூ 803 லிருந்து ரூ 853 ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ 2 உயர்த்தி மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலால் வரியை மத்திய அரசு உயர்த்திவிட்டது.

எனினும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் நிம்மதியடைந்துள்ளனர். அதற்குள்ளாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்தது.
இது சாமானிய மக்களின் தலையில் இடியை இறக்கிய செயல் என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வின் படி 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் ரூ 853 செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டும். அது போல் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு சிலிண்டர் விலை ரூ 550 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிலிண்டர் மீது ரூ 100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.அதன் பிறகு, சென்னையில் சிலிண்டர் விலை ரூ 918 லிருந்து 818 ரூபாய் 50 காசுகளாக குறைந்தது. வணிக சிலிண்டர் விலை பல முறை உயர்த்தப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரு ஆண்டாக அதே விலையில் தொடர்ந்தது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தில் "நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும். உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பொட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும், பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை தள்ளிவிட்டார்களே? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது.
மக்களே, அடவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. மத்திய பாஜக அரசே தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications