மசூதியை இடித்து ரத்தக்களறி நடந்தது.. குதர்க்கவாதம் எடுபடாது.. பாஜக + கனல் கண்ணனுக்கு அழகிரி நறுக்
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: ஜெர்மனியில் ஹிட்லர் என்ன பேசினாரோ, இத்தாலியில் முசோலினி என்ன பேசினாரோ, அதையே இந்தியாவில் இவர்கள் பேசி வருகிறார்கள்... கனல் கண்ணன் பேசியிருப்பது உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு என்று தமிழக காங்கிரஸ் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, சென்னை மதுரவாயலில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார்.

கருத்து சுதந்திரம்
கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. மேலும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.. எனினும் கனல் கண்ணன் பேசியிருந்தது, அவரது கருத்து சுதந்திரம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

ஸ்ரீரங்கம்
ஆனால், கனல் கண்ணனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, இதற்காக ஒரு தனி அறிக்கையே வெளியிட்டு, கனல் கண்ணனை கண்டித்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன் என்பவர் ஸ்ரீரங்கம் ரெங்கனாதர் கோயிலுக்கு முன்பாகவுள்ள தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும், அதை என்றைக்கு இடித்துத் தள்ளுகிறோமோ, அன்றைக்குத் தான் இந்துக்களுக்கான எழுச்சி ஏற்படும் என்று வன்முறையாகப் பேசியிருக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தில் எல்லா கருத்துகளுக்கும் இடமுண்டு.

சகிப்புத்தன்மை
கடவுள் மறுப்பும் உண்டு, கடவுள் ஆதரவும் உண்டு. எந்த கருத்தையும் ஜனநாயகத்தில் பேச உரிமையுண்டு. இவை தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு. தந்தை பெரியார் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். ராமானுஜரும் அவருடைய கருத்தைச் கூறியிருக்கிறார். ராமானுஜரும் இருக்க வேண்டும், பெரியாரும் இருக்க வேண்டும். அது தான் இந்திய ஜனநாயகம். நான் இவர்களை கேட்கிறேன். இந்திய விடுதலைக்கு துரோகம் இழைத்தவர் சாவர்க்கர். மகாத்மா காந்தியை கொன்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், பாரதிய ஜனதா வந்த பிறகு அவருடைய படத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்ததை காங்கிரஸ் கட்சி சகித்து ஏற்றுக் கொண்டது. இது தான் ஜனநாயகம்.

அந்தமான்
மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர். ஆனால், பாரதிய ஜனதா ஆட்சியில் அவருடைய படத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்தார்கள். காலமெல்லாம் சுதந்திரத்திற்காக உழைத்து, கல்லுடைத்து, செக்கிழுத்து, தங்கள் இளமைக்காலங்களை சிறைக் கம்பிகளுக்குள்ளே செலவிட்டு, வாழ்க்கையைத் தொலைத்த லட்சக்கணக்கான தேசியவாதிகளால் தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது.. ஆனால், அந்தமான் சிறையிலிருந்த போது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் சாவர்க்கர்.

ஹிட்லர்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்திக்கும் படம் இருக்கிறது, சாவர்க்கருக்கும் படம் இருக்கிறது. சாவர்க்கர் படம் வைத்ததை காங்கிரஸ் கட்சி சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.. கனல் கண்ணன் பேசியிருப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு. ஜெர்மனியில் ஹிட்லர் என்ன பேசினாரோ, இத்தாலியில் முசோலினி என்ன பேசினாரோ, அதையே இந்தியாவில் இவர்கள் பேசி வருகிறார்கள்.

ராமானுஜர்
இத்தகைய வன்முறை பேச்சை ஆதரிக்கிற வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குதர்க்கவாதம் பேசுவது கடுமையான கண்டனத்திற்குரியது. இத்தகைய சக்திகளை ஆதரிப்பதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று அண்ணாமலை கனவு காண்கிறார். பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில் அண்ணாமலையின் கனவு பலிக்காது. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பெருமை. அதைத் தமிழகத்தில் சீர்குலைக்க வேண்டாம்.

ரத்தக்களறி
பெரியார் சிலையை அகற்றச் சொன்னால் ஒருவர் ராமானுஜர் சிலையை அகற்றச் சொல்வார். எனவே, இதெல்லாம் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். அதைத் தான் வட இந்தியாவில் செய்தார்கள். மசூதியை இடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ரத்தக்களறி வந்தது. அது, அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து.. எனவே, தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கிற வகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கனல் கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். இத்தகைய சீர்குலைவு சக்திகளை தமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications