தங்கத்தை நம்பாதீங்க.. நல்ல முதலீடா இருக்காது.. உலகின் நெ.1 முதலீட்டாளர் முன்பே கொடுத்த அட்வைஸ்
சென்னை: தங்கம் விலை உச்சம் தொட்டு தற்போது சரியத்தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை சட்டென விழுந்துள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தை ஒருபோதும் நம்ப முடியாது என்று உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவரும் சிறந்த முதலீட்டாளராக அறியப்பட்டவருமான வாரன் பஃபெட் கூறிய கருத்து தற்போது பரவி வருகிறது.
தங்கம் விலை அண்மைக்காலமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. ஒரு லட்சத்தை இன்னும் சில நாட்களில் எட்டிப்பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக காணப்பட்டது.

சரிந்து வரும் தங்கம் விலை
இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 17 ஆம் தேதி ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டி வரலாற்று சாதனையை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இரு நாட்களாக விலை சரியத் தொடங்கியுள்ளது.
நிதிச்சந்தையில் ஏற்பட்ட கரன்சி தட்டுப்பாடு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாரன் பஃபெட் சொன்ன கருத்து
தங்கம் விலையின் இந்த சரிவு, விலை மேலும் உயரும் என நினைத்து வாங்கியவர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக ஒருபோதும் கருத முடியாது என்று உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த வாரன் பஃபெட் ஏற்கனவே சொன்ன ஒரு கருத்து மீண்டும் பரவி வருகிறது.
தங்கம் நல்ல முதலீடு இல்லை
தங்கம் மீதான முதலீடு பாதுகாப்பானது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதால், தங்கத்தின் மீது பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவரும் சிறந்த முதலீட்டாளர் என்று கருதப்பட்டவருமான வாரன் பஃபெட் மாறுபட்ட கருத்தை முன்வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் கூறியபோது, "தங்கம் நல்ல முதலீடு இல்லை" என்றார்.
பார்த்து வியக்க மட்டுமே முடியும்
வாரன் பஃபெட் கூறுகையில், "தங்கத்தினால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது. உலகில் உள்ள 1,70,000 மெட்ரிக் டன் தங்கத்தை உருக்கி ஒரு கட்டியாக உருவாக்கினாலும் அது 63 கன சதுர அடி பொருளாக மட்டுமே இருக்கும்; அதை பார்த்து வியக்க மட்டுமே முடியும்" என கூறியிருந்தார்.
"பிற்காலத்தில் விலை உயரும் என்று ஒரு யூகத்தில் மட்டுமே தங்கம் வாங்குகிறார்கள். இது தவறு. தங்கத்தை இந்த அளவுக்கு கொண்டாட அதில் உள்ளார்ந்த மதிப்பு இல்லை. ஒரு தொழிலைப் போல, வணிகத்தைப் போல தங்கம் சமூகத்திற்கு பலன் தருவது இல்லை" என்று கூறியிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே வாரன் பஃபெட் இந்த கருத்தை கூறியிருந்தார். ஆனால் தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 65 சதவீத லாபத்தை அளித்திருக்கிறது. லாபத்தை அள்ளித் தருவதில் பிற முதலீடுகளை விட தங்கம் கம்பீரமாக உள்ளது. ஆனால் இப்படியான சூழலிலும் தனது கருத்தில் உறுதியாக உள்ளார் வாரன் பஃபெட்.
நெட்டிசன்ஸ் கருத்து
"எல்லாரும் தங்கத்தை துரத்துவது ஆபத்தானது" என்று கூறியிருக்கிறார். சமீபத்திய நாட்களில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருவது, வாரன் பஃபெட் கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக சுட்டிக்காட்டி மீண்டும் அவரது பழைய கருத்தை வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.












Click it and Unblock the Notifications