விஷமத்தனமான யூகங்களை பரப்புறாங்க.. நம்ப வேண்டாம்! உறுப்பினர் சேர்க்கை பற்றி விஜய்யின் தவெக விளக்கம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க செயலி உருவாக்கப்படும் என்றும், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கே நிர்வாக பதவி வழங்கப்படும் என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக தவெக சார்பில் பரபரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கைவசம் இருக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அதற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் விஜய் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டார். இதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண்பதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சி ஆரம்பிப்பது குறித்த அறிவிப்புக்கு பிறகு சூட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் விஜய், சூட்டிற்கு நடுவே ஒரு சில முறை ரசிகர்களை சந்தித்தார்.
அதன்பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க செயலி உருவாக்கப்படும் என்றும், இதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கே நிர்வாக பதவி வழங்கப்படும் என்று அண்மையில் தகவல் வெளியானது.
இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் படிவம் என்ற ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications