போதும்! இளைய காமராஜர்னு அழைக்காதீர்! 2026 தேர்தல் குறித்தும் பேசாதீங்க ப்ளீஸ்! விஜய் வேண்டுகோள்
சென்னை: என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும் யாரும் பேச வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்த பெற்றோர், மாணவர்களை கட்சியின் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா இன்று 3ஆவது கட்டமாக மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் குஜராத் விமான விபத்து குறித்து வேதனை தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குஜராத்
அப்போது அவர் கூறுகையில், நேற்று குஜராத்தில் மிகப் பெரிய சோகமான விபத்து நிகழ்ந்தது. அகமதாபாத் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோவை பார்க்கும்போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை இது என கூறினார்.
2 நிமிட அஞ்சலி
2 நிமிட அஞ்சலிக்கு பிறகு மீண்டும் விஜய் பேசுகையில், எல்லோரும் மிகத் தூரத்தில் இருந்து வந்துள்ளீர்கள். அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசுவேன். எனினும், ஒரு சின்ன வேண்டுகோள். பெற்றோர்கள், மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கல்வி விருது வழங்கும் விழா
இதையடுத்து கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அப்போது வால்பாறையைச் சேர்ந்த மாணவன் கார்த்திக்கிற்கு விஜய், தங்க மோதிரம் பரிசு வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை விஜய்யின் வேண்டுகோளையும் மீறி மேடையில் அவரை புகழ்ந்து பேசினார்.
விஜயகாந்த்
அவர் விஜயகாந்த், எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட்டு பேசினார். அப்போது மைக்கை வாங்கிய விஜய் மீண்டும் ஒரு வேண்டுகோள் என குறிப்பிட்டு, " 2026 தேர்தலைப் பற்றி பேச வேண்டாம். அதேபோல் தயவுசெய்து இளைய காமராஜர் என்று என்னை அழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களைப் பற்றி பேசுங்கள் என கோரிக்கை வைத்தார்.
சிறப்பிடம்
கடந்த 3 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுத் தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சந்தித்து விஜய் விருந்து வைத்து பரிசு , சான்றிதழ்களை வழங்கினார்.
எந்த மாவட்டம்
இதையடுத்து கடந்த 4ஆம் தேதி ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சை, தருமபுரி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் , புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவர்களை சந்தித்தார்.
இளைய காமராஜர்
அப்போது பேசிய ஒரு மாணவனின் தந்தை இன்று முதல் நீங்கள் இளைய தளபதி என்று அழைக்கப்படுவது போல இளைய காமராஜர் என அழைக்கப்படுவீர்கள் என கூறினார். அதை பார்த்து விஜய் சற்றே மிரண்டு போய் அவரின் தோளை பிடித்து அழுத்தினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விஜய் திட்டமிட்டு தன்னை இளைய காமராஜர் என அழைக்க வைக்கிறார் என நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. விஜய்யை கண்டித்து காமராஜர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications