குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த தவறை மறந்தும் செய்ய வேண்டாம்.. நேற்று இரவு என்ன நடந்தது?
சென்னை: சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதிக்கு செல்ல எந்த பிரச்சனையும் இல்லை.. மாறாக சிட்லபாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை அடுத்து உள்ள ராதா நகர் உள்பட குரோம்பேட்டையின் மறுபக்கம் செல்வோர் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. நேற்று இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் மிக முக்கியமான சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்று.. ஒரு காலத்தின் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டை, ரேடியல் சாலையிலும், ஓஎம்ஆர் சாலையிலும் உருவான ஏரளமான ஐடி நிறுவனங்கள் காரணமாக, சென்னையின் தவிர்க்க முடியாத வர்த்தக மையமாக வளர்ந்துவிட்டது.

சென்னையில் திநகர், புரசைவாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வணிக பகுதியாக குரோம்பேட்டை வளர்ந்துவிட்டது. அதற்கு காரணம் ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பது. அதேபோல் பல்லாவரம், ரேடியல் சாலையின் இணைப்பு பகுதியாக குரோம்பேட்டை இருப்பது தான். தென் சென்னையின் முக்கியமான ரயில் நிலையமாக குரோம்பேட்டை இருக்கிறது.
இந்நிலையில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை பொறுத்தவரை புறநகர் ரயிலில் ஏறி வருவோர், ஜிஎஸ்டி சாலை செல்ல எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த வகையிலும் தண்டாவாளத்தில் சிக்கி உயிரிழக்கமாட்டார்கள்.. ஆனால் குரோம்பேட்டை ராதா நகர், சிட்லபாக்கம் பகுதிக்கு சென்றால், அதாவது சரவணா ஸ்டோர்ஸ் கடையின் பின்புறம் உள்ள தண்டாவளைத்தை கடந்து செல்ல விரும்பினால் தொடர்ந்து மிகப்பெரிய நான்கு முக்கிய தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. இந்த ஆபத்தை உணராத இரண்டு பேர் நேற்று தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்து போனார்கள்.
இதுபற்றி இருப்புப்பாதை போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு இருப்புப்பாதை போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு இறந்து கிடந்த இளைஞர்களில் உடல்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, நேற்றிரவு மின்சார ரயிலில் வந்தவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிரிழந்தவர்களுள் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்த சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும், மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரனவ் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நேற்றிரவு தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும் போது கவனக்குறைவாக தண்டாவாளத்தை கடக்க முயன்றுள்ளார்கள். அப்போது, திடீரென அசாம் மாநிலம் டின்சுகியாவில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் அடுத்தடுத்து இருவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குரோம்பேட்டையின் கிழக்கு பக்கம் உள்ள ராதா நகர், சிட்லபாக்கம் வழியாக செல்ல விரும்புவோர். தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள்.. அதேபோல் குரோம்பேட்டையின் கிழக்கு பக்கம் உள்ள மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்று ரயிலில் ஏறும் நிலையே இருக்கிறது. அப்படி நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலையில் அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பாதையில் ரயிலில் பயணிப்போரும் கீழே இறங்கி சென்று கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.. அதுதான் அங்கு ஒரே தீர்வாக இருக்கும்.












Click it and Unblock the Notifications