தங்கம் விலை இனி குறையும்னு நினைக்காதீங்க.. ஏன் தெரியுமா? விளக்கிய தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்
சென்னை: தங்கத்தை பொறுத்தவரை இனி தொடர்ந்து விலையேற்றம் தான் இருக்கும். பெரிய விலையேற்றத்தை நோக்கி தங்கத்தின் பயணம் இருக்கும். இதனால் இனி விலை குறையும், விலை குறையும்போது தங்கம் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அது நுகர்வோருக்கு பெரிய நஷ்டத்தை தான் ஏற்படுத்தும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கணித்துள்ளார்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை சமீபத்தில் மத்திய அரசு குறைத்தது. இந்த அறிவிப்பு என்பது கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து தங்கம் விலை பவுனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரத்துக்கு சரிந்தது.

அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை என்பது படிப்படியாக உயர தொடங்கியது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிலவரங்களின் காரணமாக தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னை நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.7,455க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. இதனால் விரைவில் பவுன் தங்கம் ரூ.60,000-த்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்றும், இன்றும் தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை என்பது சரிய தொடங்கி உள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையானது.
இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. அதாவது இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,370க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் தங்கத்தின் விலை சரிவை கண்டதால் மக்கள் இன்னும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். அதாவது தங்கம் விலை என்பது வரும் நாட்களில் குறைய வாய்ப்பில்லை. தங்கம் விலை குறையும்போது வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் பெரிய நஷ்டம் தான் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
பொதுவாக தங்கம் விலை தொடர்ந்து உயரும்போது ஒரு கரெக்ஷன் இருக்கும். அந்த கரெக்ஷன் தான் இது. இதனால் தங்கம் விலை என்பது குறைகிறது. இந்த விலை நேற்று, இன்று வரை மட்டும் தான் இருக்கும். அதன்பிறகு தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கும்.
டிரம்ப்பால் எகிறப்போகும் தங்கம் விலை.. காரணம் இதுதான்! அதிரவைத்த தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்
தங்கத்தை பொறுத்தவரை பெரிய கன்சூமர் நாடாக இந்தியா உள்ளது. மற்ற நாடுகளை பார்த்தால் பொதுமக்கள் தங்கத்தை அதிகம் வாங்குவது இல்லை. முதலீட்டாளர்கள் தான் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். ஆனால் நம் நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு உள்ளது.
தற்போது கடந்த 15 நாட்களாக தங்கம் விற்பனை என்பது மந்தமாக தான் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து விலையேற்றம் தான் இருக்கும். இந்த விலை குறைவு என்பது இருக்காது. வரும் நாட்களில் பெரிய விலையேற்றத்தை நோக்கி தங்கத்தின் பயணம் இருக்கும். இதனால் இனி விலை குறையும், விலை குறையும்போது தங்கம் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அது நுகர்வோருக்கு பெரிய நஷ்டத்தை தான் ஏற்படுத்தும்.
இதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த தங்கம் விலையேற்றத்துக்கு வரும் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கிய காரணமாகும். டிரம்ப் ஜெயித்தால் தங்கம் விலை உச்சம் தொடும். அதேபோல் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதால் போர் தீவிரமாகும். இதனால் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரிக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications