கோடை விடுமுறை எத்தனை நாட்கள்?.. பள்ளிகள் திறப்பு எப்போது?.. பள்ளிக் கல்வித் துறை தகவல்
சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கான கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, 3ஆவது அலைகளுக்கு பின்னர் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நேரடி வகுப்புகள் நடத்தப்படும் வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

கொரோனா பரவல்
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அது போல் 10 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முறை பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

பொதுத் தேர்வு
ஆனால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்து பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை இந்த கல்வியாண்டில் குறைந்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள்
பொதுவாக பிளல் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு
அதன்படி 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது
இது தவிர 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications