புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி- ஒட்டப்பிடாரத்தில் மீண்டும் களம் காணும் டாக்டர் கிருஷ்ணசாமி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது புதிய தமிழகம். தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் நீண்டகால கோரிக்கை.

பட்டியலில் இருந்து நீக்கம்
அண்மையில் எஸ்.சி. பட்டியலில் உள்ள 7 ஜாதியினரை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்கள் நீக்கப்படவில்லை. இதில் புதிய தமிழகம் கட்சி அதிருப்தி அடைந்தது.

புதிய தமிழகம் தனித்து போட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என்றார். மேலும் 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் கூட்டணி கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என எத்தனை நாள் காத்திருப்பது? அதனால் தனித்து போட்டியிடுகிறோம் என்றார்.

வேட்பாளர் பட்டியல்
மேலும் 60 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். வேட்பாளர்கள் அனைவரும் மார்ச் 18-ந் தேதியன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். அப்போது தாமே முதல்வர் வேட்பாளர் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.

ஒட்டப்பிடாரத்தில் போட்டி
ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார். 1996, 2011 சட்டசபை தேர்தல்களில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications