மதுக்கடைகள் திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் காரணத்தை ஏற்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்தததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே.
அதை விடுத்து கள்ள மது பாதிப்பை தடுக்க மதுக்கடைகளை திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது! மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மதுவிற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகிறது.

கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும்.
மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications