கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவை ஊதியம் கொடுப்பது மகிழ்ச்சி - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
மிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. விரிவுரையாளர்களின் நிதி நெருக்கடியைப் போக்கும் இந்த நடவடிக்கை வ
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊதிய நிலுவை வழங்கப்பட்டாலும் மறைந்த கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கீழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். வரலாற்றுப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்ததால், 49 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சொந்த ஊரில் வயது முதிர்ந்த தாயை கவனித்துக் கொள்ளும் கடமையும் அவருக்கு இருந்தது. அதனால், விழுப்புரத்தில் தனியாக அறை எடுத்துத் தங்கி பணியாற்றி வந்த அவர், தமது ஊதியத்தில் ஒரு பகுதியை சொந்த ஊரில் வாழும் தாயாருக்கு அனுப்பி வந்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இப்போது வரை ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தார்.
தமக்குத் தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கியிருந்த முருகானந்தம், தமது அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லை என்பதாலும், தாய்க்குப் பணம் அனுப்ப முடியவில்லை என்பதாலும் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக, ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயங்கி விழுந்த முனைவர் முருகானந்தத்தை அவரது நண்பர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தம், வரலாற்றுப் பாடத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அவரது தகுதிக்கு ஏற்ற பணி கிடைத்திருந்தால், அவரது வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கும். ஆனால், கவுரவ விரிவுரையாளர் பணி மட்டுமே கிடைத்ததால், அதற்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு அடிப்படைத் தேவைகளைக் கூட அவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சூழலில் 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியமும் வழங்கப்படாததால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.
தமிழ்நாடு முழுவதும் 108 நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும். 5,583 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். இவர்களில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த கல்வித் தகுதி கொண்டவர்களைப் பணி நிலைப்பு செய்வதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1, 661 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ. 15 ஆயிரம் வீதம், 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.
இதே போன்று 2021 - 2022ஆம் கல்வி ஆண்டிலும், 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 சுழற்சி முறையில் பாடப்பிரிவுகளை நடத்த ஏதுவாக 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம், 11 மாதங்களுக்கு தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வரவேற்பு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. விரிவுரையாளர்களின் நிதி நெருக்கடியைப் போக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்தும், முருகானந்தம் என்ற விரிவுரையாளர் இறந்தது குறித்தும் நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 6 மணி நேரத்தில் ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
ஊதிய நிலுவை வழங்கப்பட்டாலும் கூட, கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் மறைவால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications