ஜல்லிக்கட்டில் துள்ளி விளையாடிய வெள்ளையன் உயிரிழப்பு... கண்ணீருடன் விடை கொடுத்த விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டில் துள்ளி விளையாடிய வெள்ளையன் உயிரிழப்பு... கண்ணீருடன் விடை கொடுத்த விஜயபாஸ்கர்
சென்னை: ஜல்லிக்கட்டு களத்தில் சுற்றிச்சுழலும் காளை வெள்ளையன். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செல்லமாக வளர்த்த அந்த காளை உயிரிழந்து விட்டது. வெள்ளையனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கொம்பன், சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், கருப்புக் கொம்பன் என்ற கொம்பன் காளைகளை விரும்பி, செல்லமாக வளர்த்துவந்தார்.
இவர் வளர்த்த காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பிடிபடாத காளைகளாக பெயரெடுத்தன. இந்த நிலையில்தான், இவர் ஆசையாக வளர்த்த பிடிபடாத காளை என்று பெயரெடுத்த கொம்பன் காளை கடந்த 2018-ல் தென்னலூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் எதிர்பாராதவிதமாக தடுப்பு மரத்தில் மோதி, தலையில் காயம் ஏற்பட்டு இறந்துபோனது. அந்த கொம்பன் களையை தனது தோட்டத்திலேயே புதைத்து அதற்கு சமாதி அமைத்து விஜயபாஸ்கர் தினசரி வழிபட்டு வருகிறார்.

வெள்ளைக்கொம்பன் உயிரிழப்பு
இந்நிலையில், தற்போது வெள்ளை கொம்பன் காளையும் உயிரிழந்திருப்பது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது சோகத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜயபாஸ்கர்.
ஜல்லிக்கட்டு களத்தில்
நான்கு கால்
காட்டாறு
என் வெள்ளையன்
வால் முளைத்த சூறாவளி...
நான் முதன்முதலில் அன்பைக்கொட்டி
வளர்த்த செல்லக்காளை
வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திவிட்டான்!
சொல்லில் அடங்கா துயரத்துடன்
வெள்ளையன் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் நெகிழ்ந்து பிரார்த்திக்கிறேன்! என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

பிடிபடாத காளை
வெள்ளையன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர்பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாடுபிடி வீரர்களை திணறடித்து, பல்வேறு பரிசுகளை வென்று வந்தது வெள்ளைக் கொம்பன் காளை.

வெள்ளைக்கொம்பன்
ஜல்லிக்கட்டு களத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ஜல்லிக்கட்டு காளையாக திகழ்ந்தது வெள்ளைக் கொம்பன் காளை. இந்த வெள்ளைக் கொம்பன் காளை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்து விட்டது. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பாசமாக வளர்த்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை உயிரிழந்து விட்டதைப் பார்த்து கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுதார் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் அஞ்சலி
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக என்னை அன்பால் கட்டியவனின் உயிர் அவிழ்ந்துபோனது. சொல்லில் அடங்கா துயரம்!வெள்ளையன் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் நெகிழ்ந்து பிரார்த்திக்கிறேன்!" என்று விஜயபாஸ்கர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது காளைக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இந்தப் பதிவை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலரும் பகிர்ந்து தங்களது வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications