சமூகநீதியில் மட்டுமல்ல தொழில் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய திராவிட இயக்கம்! ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல தொழில் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய இயக்கம் திராவிட இயக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

தென்னிந்திய வர்த்தகக் கழகம்
1920-ஆம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு. நீதிக்கட்சியானது முதன்முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920-ஆம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. நீதிக்கட்சியைத் தொடங்கிய வெள்ளுடை வேந்தர் தியாகராயர் தான், 1909-ஆம் ஆண்டு வர்த்தகப் பிரமுகர்களை அழைத்துப் பேசி முதன்முதலாகத் தென்னிந்திய வர்த்தகக் கழகத்தை உருவாக்கியவர் என்பதை உங்கள் அனைவருக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

வெள்ளுடை வேந்தர் தியாகராயர்
12 ஆண்டு காலம் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் மட்டுமல்ல, தொழில் வளர்ச்சிக்காக South Indian Trade Journal என்ற இதழையும் தியாகராயர் அவர்கள் வெளியிட்டு வந்தார். இதனை இங்கே நினைவூட்டக் காரணம் - சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல, சென்னை மாகாணத்தில் தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம் என்பதால்தான்.

திராவிட மாடல்
இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் - சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் - தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

1 ட்ரில்லியன் டாலர்
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழிலதிபர்களை - தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தொழிலாளர் துறை
தொழில்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முறையின் வாயிலாக சுமுகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறையானது நடவடிக்கை எடுத்து வருகிறது. "தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை" (Ease of Doing Business) என்பதை செயல்படுத்தி வருகிறோம்.

தலைசிறந்த இடம்
இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர்கள் - தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம்.












Click it and Unblock the Notifications