முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்.. பெரம்பலூரில் இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை! கலெக்டர் உத்தரவு
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் முத்து ராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை செல்வதாக இருந்தது. இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட முதுகு வலியால் கடைசி நேரத்தில் செல்ல முடியாமல் போனது..
மருத்துவர் அறிவுரைப்படி, அதன் பிறகு வெளியூர் நீண்ட நேரப் பயணிகளை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்தே வந்தார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
இந்த இரு நாட்கள் சுற்றுப்பயணத்தில் அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் பின் எறையூரில் அமையும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டும் அவர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து சோழபுரம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
திங்கள் மாலை அரியலூர் விருந்தினர் இல்லம் செல்லும் முதல்வர், இரவு அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 29ஆம் தேதி காலை அரியலூர்- செந்துறை சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்வர் கலந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து பெரம்பலூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்தச் சூழலில் முதல்வரின் வருகை கருதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு, இந்த இரு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெங்டபிரியா உத்தரவிட்டுள்ளார்.
தடையை மீறி டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வாவின்வழி விமானங்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்க எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.