வறட்சி.. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 25 வட்டங்களில் விவசாயம் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை: குறைந்த மழைப் பொழிவினால் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பருமழை அபரிமிதமாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறினாலும் சில ஊர்களில் கண்மாய்கள் நிரம்பவில்லை. விவசாயமும் சரிவர நடைபெறவில்லை. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனதால் பல கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. அணைகள் வற்றத்தொடங்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டில் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications