தமிழகத்தில் கனமழைக்கு ரெஸ்ட்..4 நாட்களுக்கு வறண்ட வானிலை..அச்சுறுத்திய காற்றழுத்தம் புஸ்
சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. ஆரம்பமே அமர்களம் என்பது போல பல பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மழை படிப்படியாக குறையவே வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
நவம்பர் மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தலைநகர் சென்னை மட்டுமல்லாது காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழை அளவாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செமீ அளவிற்கு அதிகனமழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன.
கொட்டி தீர்க்கும் வடகிழக்கு பருவமழை! இன்று தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! வானிலை மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக பகுதிகளை நோக்கி வரும், கன மழை இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தின் 3வது மழைப்பொழிவாக பார்க்கப்பட்டது.
குளிரான சென்னை
எதிர்பார்த்த அளவுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. மிக கனமழையை எதிர்பார்த்த மக்களுக்கு பரிசாக குளிர் கிடைத்தது. சென்னை உள்பட உள்மாவட்டங்களில் மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற குளிர் வாட்டி வதைத்தது.
குளிருக்கான காரணம்
குளிருக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த வானிலை ஆய்வாளர்கள், மே மாதங்களில் ஏதாவது புயல், தாழ்வு மண்டலம் உருவாகும்போதோ அல்லது அது கடந்து செல்லும்போதோ எப்படி வட இந்திய பகுதிகளில் உள்ள வறண்ட காற்று உள்ளிழுக்கப்பட்டு வெப்பம் எப்படி அதிகரிக்கிறதோ?, அதேபோல்தான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதிகளுக்கு அருகில் வந்தததால், வட இந்திய பகுதிகளில் உள்ள குளிர்ந்த காற்றை இழுத்து சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழலை உருவானதாக கூறினர்.
வலுவிழந்த காற்றழுத்தம்
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுவும் தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான போதே மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அது கடலுக்குள்ளே கரைந்து காணாமல் போய் விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் . தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பரில் புயல் உருவாகுமா?
இந்த இடைவெளிக்கு பிறகு, டிசம்பர் 2வது வார தொடக்கத்திலோ அல்லது 3வது வாரத்திலோ இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்பட உள்ளதாகவும், அதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிகழ்வு புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்துக்கே அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.