என்னாது எச் ராஜாவா?, ஆளுநரா? அவருக்கு அந்த தகுதி எல்லாம் இருக்கா என்ன? துரை வைகோ கடும் விமர்சனம்
ஆவடி: பாஜகவை சேர்ந்த எச் ராஜா போன்றோருக்கு ஆளுநர் ஆகும் தகுதி உள்ளதா என மதிமுக செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக ஆவடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி 500 க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்.
அது போல் பாஜக, அமமுக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்தும் மதிமுகவில் பலர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து துரை வைகோ ஆலோசனை நடத்தினார்.

தேர்தல்கள்
இனி வரும் தேர்தல்களில் மதிமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கழக வளர்ச்சி பணிகள் கழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தினேன்.

பல்கலைக்கழக துணைவேந்தர்
பல்கலைக்கழக துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கலாம் என்ற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்கிறார்கள்.

துணை வேந்தர்கள்
தமிழகத்திலும் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற வரைவு மசோதாவை மதிமுக வரவேற்கிறது. பாஜகவைச் சேர்ந்த எச் ராஜா ஆளுநர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர் என அண்ணாமலை கூறியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை. எச் ராஜாவுக்கு ஆளுநர் ஆகும் தகுதி உள்ளதா என துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ
துரை வைகோ மேலும் ஒரு கூட்டத்தில் பேசுகையில் எனக்கு வாரிசு அரசியல் அறவே பிடிக்காது. ஆனால் தொண்டர்கள் என்னை நிர்பந்தித்து அரசியலுக்குள் இழுத்துவிட்டனர் என்றார். திமுகவில் வைகோ இருந்த போது அங்கு தனது மகனை கருணாநிதி கட்சியில் முன்னிலைப்படுத்தினார் என்ற கோபத்தில்தான் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் அவரது மகனே அரசியலில் நுழைந்துள்ளது கட்சியில் பலருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிபபிடத்தக்கது.












Click it and Unblock the Notifications