விருதுநகரா? திருச்சியா? குழப்பத்தில் துரை வைகோ! பம்பரம்? சூரியனா? கலக்கத்தில் மதிமுக?
சென்னை: மதிமுகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு சீட்டு என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அந்தத் தொகுதி எது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார்கள்.

மதிமுக சார்பில் வைகோவின் வாரிசு துரை வைகோ களம் இறங்கப்போகிறார் என்பது உலகத்திற்கே தெரிந்த விசயம்தான். அவர் விருதுநகர் தொகுதியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.திருச்சி தொகுதிகூட மதிமுகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
திருச்சி அதிமுகவின் கோட்டை. தலித் எழில்மலை அங்குதான் நின்று அதிமுக சார்பாக வென்றார். அதன்பின்னர் ஒருகாலத்தில் மதிமுகவின் முக்கிய முகமாக இருந்த எல்.கணேசன் கூட இரட்டை இலை சின்னத்தில் நின்றுதான் இந்தத் தொகுதி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

அதிமுகவுக்கு இணையாக இந்தத் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் பலமுறை வென்றுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கூட இதனைக் காங்கிரஸ்தான் கைப்பற்றியது.
திருநாவுக்கரசர் தற்போது அந்தத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் 6,21,285 வாக்குகளைப் பெற்றார். 59.28% வாக்குகள் என்பது சாதாரண விசயம் இல்லை.

ஆனால், இந்தமுறை மதிமுகவுக்கு இந்தத் தொகுதி அளிக்கப்பட்டால் திமுக கூட்டணி ஆதரவில் அமோகமாக வெல்லலாம் என மதிமுக தரப்பில் அழுத்தம் தருவதாகச் சொல்கிறார்கள்.
விருதுநகர் என்பது வைகோவின் மனம் விரும்பும் தொகுதி. 2014 மக்களவைத் தேர்தலில் வைகோ நின்ற தொகுதி. அப்போது 261,143 வாக்குகளைப் பெற்றார். ஆனால் வெற்றிக்கொடி நாட்டமுடியவில்லை.

அதற்கு முன்பு 2009 தேர்தலிலும் வைகோ போட்டியிட்ட தொகுதி இது. 2,91,423 வாக்குகளை வைகோ பெற்றிருந்தாலும் அவரைவிட 3,07,187 வாக்குகளைப் பெற்று மாணிக் தாகூர் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவான ஒரு அலை வீசியது. அந்தச் சுழலில் சிக்கி தோல்வியைத் தழுவினார் வைகோ. ஆக, அப்பா தோல்வியைத் தழுவிய இடத்தில் மகன் வெற்றிவாகை சூட வேண்டும் என்று கணக்குப் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அவரது தொண்டர்கள்.

திருச்சியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலத் தலைமைக்குள் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. முன்னரே அவர் கன்னியாகுமரியில் நிற்கலாம் எனச் சொல்லி வருகிறார்கள்.
திருச்சியில் திருநாவுக்கரசருக்கு நல்ல பெயர் இல்லை. ஆனாலும், ராகுல் நிறுத்தப்பட்டால் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று அவரை வெற்றிபெறச் செய்வோம் என்கிறார் திருச்சி வேலுச்சாமி.
அப்படிப் பார்த்தால் துரை வைகோவின் வலைக்குள் விருதுநகர் மட்டுமே மாட்டும் என்கிறார்கள். அதே நேரத்தில் திருமாவைவிட சீனியர் வைகோ. திருமா கட்சிக்கு 4 சீட்டுகள் கேட்கும் போது மதிமுக ஒரு சீட்டுடன் நின்றுவிட்டால் அவமானம் என்றும் அவரது தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்களாம்.

அப்பா, மகன் இருவருக்குள் கட்சி சுருங்கிவிட்டால், எப்படி தொண்டர்கள் உற்சாகமாகக் கட்சிப் பணி ஆற்றுவார்கள். இனி மதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்றும் சில சீனியர்கள் புலம்பி வருவது நம் காதுகளை வந்து முட்டுகிறது.
ஒரு சீட்டு மதிமுகவுக்கு வழங்கப்பட்டாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைவை அழுத்தம் தருவதாகவும் சொல்கிறார்கள். அப்படி என்றால், கட்சியை எப்படி வளர்ப்பது? அப்படி என்றால் பம்பரம் சின்னத்தைப் பிள்ளைகளிடம் விளையாடக் கொடுத்துவிட்டு சும்மா இருந்து விடுவோம் என மதிமுக நிர்வாகிகள் பலர் அறிவாலயம் வாசல் முன்பாகவே ஆவேசமாகப் பேசி வருவதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications