அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு! தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்!
சென்னை: அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.
இதனால் திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.
பாலாறு குறுக்கே அணை.. இபிஎஸ் அறிக்கையை பார்த்து அழுவதா? சிரிப்பதா? அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!
துரைமுருகன் அறிவிப்பு
''திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.''
தலைவர் பதவிக்கு தேர்தல்
இது மட்டுமல்லாமல் திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்திருக்கிறார். துரைமுருகன் வெளியிட்டுள்ள பொதுக்குழு பற்றிய அறிவிப்பால், திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. இதனிடையே பொதுக்குழுவுக்கு முன்னதாகவே மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
போட்டியின்றி
திமுக தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவியிடங்களுக்கு பொதுக்குழு மூலம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு சம்பிரதாய அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. நூற்றுக்கு நூறு சதவீதம், ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும் டி.ஆர்.பாலு பொருளாளராகவும் மீண்டும் தேர்வு ஆகப் போவது உறுதியாகிவிட்டது.
அண்ணா அறிவாலயம்
சென்னையில் திமுக பொதுக்குழு நடத்தப்பட்டால் வழக்கமாக கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தான் நடத்தப்படும். ஆனால் முதல் முறையாக சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு நடைபெறவுள்ளது.