தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம்
சென்னை: தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு சென்னை தேர்தல் அதிகாரி குமரகுருபரன் பதில் அளித்துள்ளார். "நாளை கூட்டம் நடத்துகிறோம் என ஒரு காகிதம் கொடுத்து விண்ணப்பித்தால் மட்டும் போதாது" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தவெக தலைவர் விஜய், வேட்பாளர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. விஜய் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பிபில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது தவெக.
தேர்தல் ஆணையத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அதன்படி விண்ணப்பிக்காததால் தவெக கூட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் இறுதி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். "காவல்துறை அனுமதி இல்லாத இடத்தில் எந்தக் கூட்டத்தையும் நடத்த முடியாது. அரசியல் கூட்டங்களுக்கு Suvidha இணையதளம் மூலம் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே ஆன்லைன் விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரில் மனு கொடுத்தாலும், ஆன்லைன் விண்ணப்பம்தான் அனுமதிக்கு அடிப்படையாக இருக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நாளை கூட்டம் நடத்தப் போகிறோம் என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் மட்டும் அனுமதி வழங்க முடியாது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். முறையான நடைமுறைகளைப் பின்பற்றி, 48 மணி நேரத்துக்கு முன்பு Suvidha போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தவெகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன், "அனுமதி மறுக்கப்படவில்லை. முறையான ஆன்லைன் விண்ணப்பம் இல்லாததால் கூட்டத்தை நடத்த முடியவில்லை. சரியான நடைமுறையைப் பின்பற்றினால் அனுமதி கிடைக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications