சட்டசபைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு - அரசியல் கட்சியினரிடம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு இன்று சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபைத் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய தொடங்கி உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் தான் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது. வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரம், வாக்குப் பட்டியல் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே அவகாசம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதான செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேமாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளன.
ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் வந்து சந்திக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசினார்கள். தங்களது கருத்துக்களை மனுவாக அளித்தனர்.
தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகிய இருவரும் சென்றனர். அவர்களும் தி.மு.க.வின் கருத்துக்களை மனுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
இன்று பிற்பகல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளுடனும், தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்கள். காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
நாளை செவ்வாய்கிழமை தலைமை செயலாளர், காவல்துறை இயக்குனர், அரசு துறைகளின் செயலாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடைபெற்ற பின்னர் பிற்பகலில் செய்தியாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.