அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி கொடுத்த ஓபிஎஸ்..பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டே நீக்கிய இபிஎஸ்
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர் செல்வம் நியமித்த நிலையில்
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை வெடித்ததற்கு பின்பாக, பொதுக்குழு, நீதிமன்றம் வழக்கு என தொடர்ந்து சர்ச்சை நீடித்த வண்ணம் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமசந்திரன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
பந்தாடப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன்.. எத்தனை நாளைக்கு என தெரியாத ஒரு பதவி.. ஏற்பாரா, மறுப்பாரா?
ஓபிஎஸ் அறிக்கை
இந்நிலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
இதனிடையே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து கூறி வந்த நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுகவின் அரசியல் ஆலோசகர் என்று பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் பதவி கொடுத்த சில நிமிடங்களிலேயே அவரது அடிப்படை உறுப்பினர் பொறுப்பு பறிக்கப்பட்டதுதான் சோகம். எம்ஜிஆர் காலத்தில் அசைக்க முடியாத அமைச்சராக பதவி வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். கருணாநிதி, எம்.ஜி.ஆர். அரசியல் காலகட்டத்தில் ராஜதந்திரி என்று வர்ணிக்கப்பட்டவர்.
அரசியல் பயணம்
1971ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் பண்ருட்டியார். பின்னர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். 1977ல் இருந்து 1987 வரை அரசியல் காலகட்டத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அடுத்தப்படியாக பேசப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஜெயலலிதா தலைமை
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமை ஏற்றார். பின் ஜெயலலிதாவில் தூக்கியடிக்கப்பட்ட போது நால்வர் அணியினரில் ஒருவராக பண்ருட்டியார் இருந்தார். குதிரை என்று இழுத்துவந்தேன் கழுதை என்று தெரிந்ததுமே சசிகலா நடராஜனிடமே விட்டுவிட்டேன் என்று ஜெயலலிதாவையே பொதுமேடையில் விமர்சித்தவர்.
விஜயகாந்த் தலைமை
பாமகவில் சேர்ந்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சிக்கு முதல் எம்.எல்.ஏ. சிறப்பை 1991-ல் பெற்று தந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது பாமகவின் சின்னம் யானை. அதனால் யானையில் ஊர்வலமாக சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் பாமகவில் இருந்து விலகி மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை நடத்த முடியாமல் புதியதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த் தலைமையை ஏற்றார். அக்கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாகி சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் ஆனார். அங்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார். சட்டசபை தேர்தலில் ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
கட்சியை விட்டே நீக்கம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையை ஏற்கும் முடிவுக்கு வந்து போயஸ் கார்டன் சென்று ஆலோசனைகளை கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து கூறி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலாவே நேரில் சென்று பார்த்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.