திமுக ஆட்சிக்கு இன்னும் "27 அமாவாசை" தான் இருக்காமே.. குண்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. என்ன காரணம்?
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
சென்னை: "இன்னும் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி.. ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும்" என்று ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ள பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை மீண்டும் ஏற்படுத்தி வருகிறது.
நேற்றைய தினம் திருச்சியில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விளம்பர அரசியல் செய்து, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினரின் முகத்திரையை கிழிக்க நல்ல வாய்ப்பு தான் இந்த தேர்தல். நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திமுகவினரின் முகத்திரையை கிழிக்க வேண்டும்..
இந்த தேர்தல் நூற்றுக்கு நூறு அதிமுக வெற்றி பெறும் தேர்தல்... இதன் மூலமாக திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.. 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது... அப்போது நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலும் நடக்கும் . அதற்கான அச்சாரமாக தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இருக்கும் என்றார்..
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த கல்விமான் மேதை...ஆளுநரை தினமும் திட்டுவோம் - துரைமுருகன் தாக்கு
ஓபிஎஸ்
ஓபிஎஸ் இப்படி இந்த விஷயத்தில் பேசுவது புதிதுதான்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கான அஸ்திரத்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்.. எங்கே போய் பேசினாலும், பிரச்சாரம் செய்தாலும், பாஜகவின் கொள்கையான ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னெடுத்து வருகிறார்.. திமுக ஆட்சிக்கு இத்தோடு காலி, விரைவில் தேர்தல் வரப்போகிறது என்பதையும் சொல்லி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி
நேற்றுகூட, கரூரில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "2024ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும்... அதனால், 27 அமாவாசை தான் இந்த ஆட்சி.. ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும்... காவல்துறை நேர்மையாகச் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எதற்காக, மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே.. ஆனால் இப்போதுள்ள அமைச்சர்கள் எப்படி கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது என்று ஆலோசிப்பது தான் இவர்களது வேலையா? இதில் திறமை வாய்ந்தவர் கரூரில் உள்ளவர்... செந்தில் பாலாஜி தலைமேல் கத்தி தொங்குகின்றது" என்று பேசியுள்ளார்.
கண்டனம்
எடப்பாடி தொடர்ந்து இப்படி பேசிவருவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் முதல் மதிமுகவின் துரை வைகோ முதல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்து வருகின்றனர்.. எனினும் எடப்பாடி பழனிசாமி இப்படி பாஜக ஆதரவாளராக பேசிவருவதற்கு காரணங்கள் பிடிபடவில்லை.. ஜனநாயகத்தக்கு எதிரானது கருத்தை பதிவு செய்தாலும், இது சாத்தியமா என்ற சந்தேகமும் எழுகிறது.
வழக்கு விசாரணை
சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் வந்த உடனேயே எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முக்கிய நிர்வாகிகளுக்கு போனை போட்டு நம்பிக்கை தந்தார்.. உற்சாகமூட்டினார்.. "வழக்கு விசாரணை என்று யாரும் பயப்படாதீங்க.. அவங்க நம்ம மேல கேஸ் போட்டால், நாம அவங்க மேல இருக்கிற ஃபைல்களை தூசி தட்டி எடுப்போம்.. என்கிட்ட எல்லா ரிக்கார்டுகளும் இருக்கு.. அவங்க ஆட்சிக்கு வந்துட்டாங்க என்று சோர்வா மட்டும் இருந்துடாதீங்க.. டெல்லியில இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.. சட்டசபை தேர்தலும் விரைவில் நடத்த வாய்ப்புள்ளது, அதனால் உற்சாகமாக வேலை பாருங்க" என்று தெம்பூட்டியதாக செய்திகள் கசிந்தன.
பிரதமர் மோடி
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஓபிஎஸ் அணுகுமுறையைவிட, எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை வித்தியாசமாக தெரிகிறது.. "மோடியின் வாரிசாக மாறிவிட்டதால் அதிமுக ஒரே நாடு முழக்கத்தை முன்வைக்கிறது" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று விமர்சனம் செய்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.. என்றாலும், பாஜகவின் பிம்பமாக, பாஜகவின் சாயலாக, பாஜகவின் குரலாக அதிமுக ஒலிக்க தொடங்கி உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. பார்ப்போம்..!