திமுகவுக்கு இதே வேலையா போச்சு..! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி பொய் வழக்குப் போடுவது தொடர்கதையாகி உள்ளது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக புகார் வந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் அவரைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் சென்றிருக்கலாம் என்றும் அவரை கைது செய்ய தனிப்படை பெங்களுர் சென்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இந்தநிலையில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி பொய் வழக்குப் போடுவது தொடர்கதையாகி வருகிறது என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடையே ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில் முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்யத் துடிக்கிறது விடியா அரசு என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

போலீசார் கொடுமைப்படுத்தியதாக புகார்
மேலும், உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தன்வசமுள்ள காவல் துறையின் மூலம், ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களான வசந்தகுமார், ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவரையும், எந்தவித புகாரும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்
இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, காவல் துறையினரின் இந்தச் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கிற்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்திற்கு முரணாக தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, உடனடியாக மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும்,மேலும் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனக்குள்ள சட்ட உரிமையின்படி புனையப்பட்ட இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இந்த விடியா அரசின் காவல்துறை முன்னாள் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதையும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கடும் கண்டனத்திற்கு பிறகும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும், கடுமையாக கண்டிக்கின்றேன் என்று எடப்பாடி பழனிசாமி தனதூ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications