அடுத்தடுத்து இரண்டு முக்கிய முடிவுகள்.. வாபஸ் பெற்ற தமிழக அரசு.. என்ன காரணம்!
சென்னை: மின்சார வாரிய பணிகள் தனியாருக்கு ஒப்படைப்பு, சென்னையில் குப்பை கொட்ட வரி என அடுத்தடுத்து இரண்டு முடிவுகளை எடுத்து வாபஸ் பெற்றுள்ளது தமிழக அரசு. இண்டு முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலுக்கு பின்பே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை விமர்சித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? என்று கண்டித்துள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்களாக நிரப்புவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்தது,
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும். பணியின்போது ஊழியா் இறக்க நேரிட்டால், அவரை பணியமா்த்திய ஒப்பந்ததாரா், இறந்தவரின் வாரிசுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கி விட்டு, அதனை மின் வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
மேலும் துணை மின் நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பதற்கு மின்வாரியம் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அறிவிப்பு வாபஸ்
இதையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தமிர்நாடு மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயமாகாது என்றும், தமிழக மின்வாரியத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் துணை மின் நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் வரி
இதனிடையே இரண்டாவது சென்னையில் குப்பை கொட்ட அரசு வரி விதித்து உத்தரவிட்டது. 2021 ஜனவரி முதல் சொத்துவரியுடன் சேர்த்து குப்பை கொட்டுவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ரூ 10ல் தொடங்கி ஆயிரக்கணக்கில் வரி விதிக்கப்பட்டது.
வாபஸ் பெற்ற ஆணையர்
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை திருப்ப பெற அறிவுறுத்தினார். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், குப்பை கொட்டுவதற்கு வரி விதிக்கப்படும் அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.
தேர்தல் நேரம்
இந்த இரண்டு அறிவிப்புகளுமே சர்ச்சைக்குரியவையாக பார்க்கப்படுகிறது. முதல் முடிவுக்கு மின்சாரவாரிய ஊழியர்கள் தரப்பிலும், இரண்டாவது முடிவுக்கு சென்னையிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சர்ச்சையை விரும்பாத எடப்பாடியார் உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தான் இரண்டு முடிவுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.. ஏற்கனவே பள்ளி திறப்பு உள்பட பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்புகளும் முதல்வர் தலையிட்டதால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.