எல்லா ஏற்பாடுகளும் தயார்... அழைப்பு விடுத்த தி.நகர் சத்யா.. களத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை முதல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதலும், தைரியமும் கூறி வரும் சூழலில் இப்போது எடப்பாடி பழனிசாமியும் மக்களை சந்திக்க வந்திருக்கிறார்.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பிரட், பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..

முதல்வர் ஆய்வு
கடந்த சனிக்கிழமை இரவு சென்னை முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரே வெள்ளக்காடானது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் சுழ்ந்துநின்றதால், அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முதலமைச்சரே நேரில் ஈடுபடத் தொடங்கினார். மகேந்திரா தார் ஜீப்பில் அமர்ந்தவாறு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் கூட ஆய்வு செய்த அவர், பல இடங்களில் மழை நீரில் நடந்தும் சென்றார். முதலமைச்சரின் இந்த ஆய்வு தமிழக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஸ்டாலின் ஆய்வு செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

திடீர் நிகழ்வு
இந்தச் சூழலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பிற்பகல் ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக இது குறித்த எந்த திட்டமிடலும் இல்லாத நிலையில், ஸ்டாலினின் செயல்பாடு பாராட்டு பெற்று வருவதை கவனத்தில் கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு திடீர் நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்பாடுகள்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் படைத்தளபதிகளில் ஒருவரும், தீவிர ஆதரவாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மூலம் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென காலை முதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எல்லா ஏற்பாடுகளும் தயாராகிய பிறகு கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மழைநீரில் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரட், பிஸ்கட், போர்வை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

ஊரில் இல்லை
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் சென்னை மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுபவருமான ஜெயவர்தன் ஆகியோரும் உடனிருந்தனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், இந்த ஆய்வின் மூலம் தன்னை அதிமுகவின் ஒற்றை பிரதிநிதியாகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் அடையாளம் காட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications