அரசியல் குருநாதர் இன்னும் மாவட்டச் செயலாளர்.. சிஷ்யர் எடப்பாடி 2-வது முறையாக முதலமைச்சர் வேட்பாளர்.!
சென்னை: அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது அரசியல் குருநாதர் இன்னும் மாவட்டச் செயலாளராகவே இருந்து வருகிறார்.
கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்ற சொலவாடைக்கேற்ப அரசியலில் அதிர்ஷ்டக் காற்று எடப்பாடி பக்கம் வீசி வருகிறது.
அரசியல் வாசமே தெரியாத விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஈரோடு முத்துச்சாமி மூலம் பொதுவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார்.
வலுவிழந்த ஓபிஎஸ்.. கொடி நாட்டிய எடப்பாடியார்.. கொங்கு மண்டலமா? தென்பாண்டி சீமையா.. இன்னும் இருக்கு!
விவசாயக் குடும்பம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமம் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூர்வீகம். இப்போதும் சேலம் செல்லும்போதெல்லாம் சிலுவம்பாளையத்திற்கு ஒரு விசிட் அடித்து தோட்டத்தையும், அம்மாவையும் பார்த்து விட்டு வருவார். அரசியல் வாசமே தெரியாத விவசாயக் குடும்பத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, வெல்ல மூட்டைகளை விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் ஓரளவு கணிசமான வருமானம் கைக்கு வந்ததை அடுத்து மெல்ல அரசியல் பக்கம் தன் பார்வையை திருப்பினார்.
அரசியல் குருநாதர்
எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குருநாதர் என்றால் அது ஈரோடு முத்துச்சாமி தான். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராகவும், அதிமுகவின் முக்கியப் பிரமுகராகவும் முத்துச்சாமி திகழ்ந்தார். அதிமுகவில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தை கட்டியாண்ட முத்துச்சாமி, வழக்கு ஒன்றில் சிக்கியிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். இதையடுத்து முத்துச்சாமியின் ஆதரவாளராக மாறிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இன்னும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்.
அரசியல் அரிச்சுவடி
அதிமுகவில் சாதாரண கிளைச் செயலாளராக தனது அரசியல் கிராஃபை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அக்கட்சியின் ஆட்சியில் உச்ச பதவியில் வீற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொடுத்து அவர் முதல்முறையாக 1989 தேர்தலில் போட்டியிட்ட போது வெற்றிக்கான வியூகத்தை பாடமெடுத்த முத்துச்சாமி இன்னும் மாவட்டச் செயலாளராக மட்டுமே இருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முத்துச்சாமி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.
நன்றி மறவாத
எங்கிருந்தாலும் வாழ்க என்பதை போல் இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை கண்டு வியந்து நிற்கிறார் ஈரோடு முத்துச்சாமி. இதனிடையே முத்துசாமியின் மனைவி கடந்த ஆண்டு காலமான போது, கட்சி பேதங்களை கடந்து நன்றி மறவாத குணத்துடன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.