தற்காலிக பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. ஜெயலலிதாவிற்கு நிகராக அதிகாரம்
syn: அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் ஜெயலலிதாவுக்கு நிகராக அதிகாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார் மைத்ரேயன். மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நிகராக அதிகாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
எல்லா சாலைகளும் வானகரத்தை நோக்கி என்பது போல அதிமுகவில் இன்றைய தினம் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆனால், பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அறிவிக்க உள்ளது.

கிளம்பிய எடப்பாடி பழனிச்சாமி
உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியும். இதனிடையே, பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி காலை 6.45 மணிக்கே தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் தற்போது பொதுக்குழு நடைபெறும் வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.

குவியும் தொண்டர்கள்
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர். ஒருபக்கம் பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் நோக்கி அதிமுகவினர் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்காலிக பொதுச்செயலாளர்
இன்றைய தினம் பொதுக்குழு நடைபெறும் பட்சத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதிப்படுத்து விதமாக செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு
இன்றைய தினம் நடைபெறும் பொதுக்குழு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் அதிமுகவின் ஒ.எஸ். மணியன். எல்லோரும் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று கூறுவார்கள். இன்றைய தினம் நடைபெறும் பொதுக்குழு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஒற்றைத்தலைமை பிரச்சினை
வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்
அன்றைய தினம் தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இதனையடுத்து இன்றைய தினம் நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

16 தீர்மானங்கள்
இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் தீர்மானம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கும் தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட உள்ளன. கடைசியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

அதிகாரம்
இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். இதன் மூலம் அவரின் பதவிக்கு சட்ட ரீதியாக பலமான ஆதரவு கிடைக்கும். அத்துடன் மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி, வட்ட அளவிலும் தீர்மானங்களை நிறைவேற்றி, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக எல்லா மாவட்டங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படுவார். மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நிகராக அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications