மத்திய அரசு குறைத்துவிட்டது.. பெட்ரோல் டீசல் வரியை இந்த விடியா அரசு குறைக்குமா.. எடப்பாடி அறிக்கை
சென்னை: மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல் மற்றும் டீசல் மாநில அரசின் வரியை குறைத்து மக்களின் சுமையை இந்த விடியா அரசு குறைக்குமா என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: மத்திய அரசு , பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மத்திய கலால் வரியை இதுவரை இரண்டு முறை குறைத்துள்ளது. முதல்முறையாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும் ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது.
மேலும் மத்திய அரசு அவ்வாறு கலால் வரியை குறைக்கும் போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் அந்தந்த மாநில அரசுகளின் மாநில வரியை குறைக்க கேட்டுக் கொண்டதை அடுத்து இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைத்தன.
பெட்ரோல், டீசல்- செஸ் வரியை குறைக்காத மத்திய அரசு- மாநில அரசுகளிடம் பந்தை திருப்பிவிடும் கண்ணாமூச்சி
பெட்ரோல் மற்றும் டீசல்
ஆனால் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்காமல் தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. தொடர்ந்து மத்திய அரசு இரண்டாவது முறையாக நேற்று மத்திய கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலிக்கு 8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது.
சமையல் சிலிண்டர்
மேலும் உஜ்வாலா சமையல் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மற்ற பொருட்களின் விலைகள் குறையும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் குறைந்துள்ளது.
Recommended Video
சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ 8.22 குறைந்து ரூ 102.63க்கும் டீசல் லிட்டருக்கு ரூ 6.70 குறைந்து ரூ 94.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இரண்டாம் முறை விலைக் குறைப்பை அடுத்து அண்டை மாநிலமான கேரளாவையும் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு
ஆக மத்திய அரசு முதல் முறை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ 5 ம் இரண்டாவது முறை ரூ 8ம் என்று மொத்தம் ரூ 13 ஐ குறைத்துள்ளது. அது போல டீசல் ஒரு லிட்டருக்கு ரூ 10-ம் இரண்டாம் முறை ரூ 6ம் என்று மொத்தம் ரூ 16 ஐ குறைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் திமுக நிறைவேற்ற முடியாது பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இந்த விடியா திமுக அரசு, தனது 504ஆவது வாக்குறுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதி
ஆனால் பெட்ரோலுக்கு ரூ 3 ஐ மட்டும் குறைத்துள்ள இந்த விடியா அரசு டீசல் விலையை இதுவரை குறைக்கவில்லை. தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை இந்த அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றாதது தமிழக மக்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திமுக கட்சியின் பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் டிஆர் பாலு பேட்டியளித்த போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல்
அவ்வாறு பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் குறைந்தது ஒரு லிட்டர் மற்றும் டீசலின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குறையும் என்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார். பொதுமக்களின் தினசரி வாழ்வில் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு தவிர்க்க முடியாது ஒன்றாகிவிட்டது.
விவசாயிகள் பயன்பெறும்
வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படும் வாகன போக்குவரத்திற்கும் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்கடருக்கும், பம்ப் செட் மோட்டார்களுக்கும் மீனவர்களின் படகுகளுக்கும் அலுவலகம் செல்போர் மற்று்ம சாதாரண மக்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இன்றியமையாததாகும். இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் போது மற்ற அனைத்து பொருட்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும் போது அனைத்து பொருட்களின் விலையும் குறையும் . இதனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயனடைவர். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.