கூட்டணியை மட்டும் நம்பி இருக்க கூடாது.. ஹை டென்ஷன் மோடில் எடப்பாடி.. அப்போ 2026 பிளான் தான் என்ன?
சென்னை: அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தோல்விக்கான காரணத்தை அதிமுக நிர்வாகிகள் விளக்கிய நிலையில், அதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பல முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு + புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. அதிமுக கூட்டணி இந்த தொகுதியில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாகப் பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி: இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 7ஆவது நாளாகச் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளின் தோல்வி தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்த 3 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த 3 தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வேட்பாளர், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிமுக மூத்த தலைவர்கள் வேலுமணி, தனபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். காலை தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை வரை நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி டென்ஷன்: காலையில் நீலகிரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அங்கே திமுக கூட்டணி வலுவாக இருந்ததாகவும் அதிமுக கூட்டணி வலுவாக இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா, பாஜக சார்பில் போட்டியிட்ட எல் முருகன் என இருவருமே நன்கு அறிந்த முகம் என்பதும் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படக் காரணம் இருந்ததாகவும் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும், நீலகிரி தொகுதிக்கு உட்பட சட்டசபை தொகுதிகளில் 6இல் 4 அதிமுக வசம் இருக்கும் நிலையில், அங்கே இந்தளவுக்குத் தோல்வி அடைந்ததை ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கடுகடுத்தாக கூறப்படுகிறது.
கோவை தொகுதி: அடுத்து மாலையில் அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்படும் கோவை தொகுதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவையில் இந்த முறை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகளைப் பெற்று வென்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4.50 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் 2.36 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கோவை தொகுதியில் அண்ணாமலையைக் காட்டிலும் வாக்கு குறைந்தது ஏன் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகிகள் கூட்டணி தொடங்கி பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர்.
2026 பிளான் என்ன: அப்போது எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றாலும் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. நமது உழைப்பை நம்பி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அனைவரும் கடுமையாக உழைக்க ரெடியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், பிற கட்சிகளில் முகம் தெரியாத பலர் வென்றுள்ளனர். எனவே, குறை சொல்வதை நிறுத்திவிட்டு களப்பணியாற்றினால் வெற்றி கிடைக்கும் எனக் கட்சி நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications