ஒருத்தரும் இருக்க கூடாது! சீனியர்களுக்கு ‘கண்’ காட்டிய இபிஎஸ்! கொத்தாக தூக்க ரெடியான ‘டெல்டா’ டீம்!
சென்னை : அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்களில் 69 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மீதம் இருக்கும் மாவட்ட செயலாளர்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் தங்கள் தரப்புக்கு இழுக்க சீனியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ள நிலையில் இதற்காகவே சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Recommended Video
மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிர்வாகி எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த பல நிர்வாகிகள் தற்போது எடப்பாடி அணிக்குத் தாவி ஓபிஎஸ்க்கு எதிராகவே ஆலோசனை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
அதிமுக அயோக்கியர்களின் கூடாரம்! பன்னீரை சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை -டிடிவி தினகரன்
அதிமுக விவகாரம்
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மொத்தம் உள்ள 2,500 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300க்கும் மேற்பட்டோர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியுள்ளனர். அப்போது சுமார் 200 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்தது. பின்னர் நாளடைவில் அது சரியத் தொடங்கியிருக்கிறது. நேரடியாகவும், மாவட்ட செயலாளர்கள் மூலமாகவும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி ஆதரவு
தற்போதுள்ள சூழலில் கட்சியில் உள்ள முக்கிய முகங்களான தங்கமணி, வேலுமணி ,சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன்செல்லப்பா, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, உள்ளிட்ட 96 மாவட்ட செயலாளர்களும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை. எம்ஜிஆர் இளைஞர் அணி. அம்மா பேரவை. தகவல் தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட சார்பான நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆதரவு சரிவு
ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை 200 என்ற எண்ணிக்கையில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 160 ஆக குறைந்துள்ளது. 2440 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் மட்டுமே இருக்கிறார். அதற்கடுத்ததாக மாவட்ட செயலாளர்கள் என பார்க்கும்போது தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரது ஆதரவு மட்டுமே உள்ளது.
சீனியர்களுக்கு உத்தரவு
இந்நிலையில் அடுத்த பொதுக்குழு நடத்துவதற்குள் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு சீனியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்களின் வைத்தியலிங்கத்தை தவிர மற்றவர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் எனவும் இதற்காக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு கீழ் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படியாவது பேசி கட்சிக்குள் தனக்கான ஆதரவு வட்டத்தில் இணைக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளார் எடப்பாடி.
ஓபிஎஸ் அச்சம்
இதற்கான பலனும் கிடைத்துள்ளதை காலையில் நடந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் ஒன்பது பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு சற்று அதிர்ச்சியில் இருந்தாலும் தற்போது இருக்கும் நிர்வாகிகளையாவது தக்க வைக்க வேண்டுமென முனைப்பாக உள்ளது.