மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்ற வாக்குறுதி என்னவானது? சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் கணக்கீடு என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதம் ஒருமுறை மின் கணக்கீடு வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பதில் அளித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்கு பின், அதிக கவனம் பெற்ற வாக்குறுதி மாதம் ஒருமுறை மின் கணக்கீடு தான். ஏனென்றால் தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்பட்டு, கட்டணம் பெறப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஸ்லாப் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது 0 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ஒரு ஸ்லாப் கட்டணமும் விதிக்கப்படும். இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரக் கட்டணம் கணக்கிடும் போது, மக்கள் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் முறை கணக்கிடும் பட்சத்தில், மக்கள் பயன்படுத்தும் மின்சாரம் பாதியாக குறையும்.
இதனால் திமுக அளித்த வாக்குறுதி மக்களிடையே கவனம் பெற்றது. ஆனால் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. 2022 செப்டம்பர், 2023 ஜூலை மற்றும் 2024 ஜூலை என்று ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 5வது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். இதன்பின் சட்டப்பேரவை கேமராவில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களும் காட்டப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காரசார விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். தொடர்ந்து வரி உயர்வு மற்றும் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு வாக்குறுதி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வரிகளை அரசு குறைக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, மத்திய அரசின் உள்ளாட்சி நிதியை பெறுவதற்காகவே வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல் வருவாய் அதிகம் பெறுவோருக்கு மட்டுமே வரி உயர்வு. ஏழைகளுக்கு அல்ல. அதிமுக ஆட்சியிலும் வரி உயர்வு இருந்தது என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்ற வாக்குறுதி என்னவானது என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர் எழுந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு முறை நிச்சயம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் தான் மின்சாரக் கட்டணம் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications