"ஐயா, என் வாழ்க்கை".. கலங்கிய வீரரின் மனைவி.. "அண்ணன் இருக்கேன்ம்மா".. ஆறுதல் தந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: அன்பு சகோதரி வானதி தேவி கடிதம் கிடைக்கப்பெற்றேன், தங்கள் கணவர் அவில்தார் பழனி அவர்களின் தியாகம் அளப்பரியது.
உங்களுக்கான உதவிகளை செய்வதில் எனக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது. இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் எப்போதும் தங்களுக்கு உண்டு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திய ராணுவ வீரர் ஹவில்தார் பழனி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைக்கும் சீன படைக்கும் இடையே நடந்த மோதலில் நாட்டிற்கு உயிர் தியாகம் செய்தவர் ஆவார். இவருடன் சேர்த்து மொத்தம் 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
இந்நிலையில் அவில்தார் பழனியின் மனைவி வானதி தேவி, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஓட்டி கடிதம் எழுதி இருந்தார்.
வானதி தேவி கடிதம்
அந்த கடிதத்தில் வானதி தேவி பழனி கூறியிருந்ததாவது: நான் 16.06.2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைக்கும் சீன படைக்கும் இடையே நடந்த எல்லை பிரச்சனை மோதலில் உயிர் தியாகம் செய்த வீர் சக்ரா அவில்தார் பழனியினி மனைவி வானதி.
உதவி செய்தீர்கள்
அய்யா என் கணவர் இறந்துவிட்டார். எனக்கோ வயது 32. என் குழந்தைகளுக்கு வயதோ 10, 7. எங்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து நம்பிக்கை இழந்து துயரத்தின் உச்சியில் தவித்த எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆறுதல் வார்த்தை கூறியும் எங்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தியும் பண உதவி செய்ததையும் எதிர்வரும் 16.06.2021 என் கணவரின் நினைவேந்தல் நிகழ்வு நடக்க இருக்கும் இந்த சமயத்தில் நினைத்து பார்க்கிறேன். நன்றி தெரியபடுத்திக் கொள்கிறேன்,
நீங்கள் அளித்த தைரியம்
'நன்றி கெட்ட உலகம்', 'கலிகாலம்' என்றெல்லாம் எதிர்மறை சிந்தனையை மக்கள் தேவையில்லாமல் சிந்திக்கிறாரகள். பேசுகிறார்கள் என்றே என்னால் நினைக்க தோன்றுகிறது. "கங்கை இன்னும் வற்றவில்லை' என்ற ஜெயகாந்தன் ஐயா அவர்களின் வார்த்தை உண்மை என்றே உணர்கிறேன். கணவனை இழந்த எனக்கு தாங்கள் அளித்த தைரியமும், ஆறுதலும் என்னை சாந்தப்படுத்தியது. ஆற்றுப்டுத்தியது. தைரியப்படுத்தியது. வாழ்கின்றோம நானும் என் குழந்தைகளும் உங்கள் ஆசியுடன். நன்றி" இவ்வாறு வானதி தேவி பழனி கூறியுள்ளார்.
சகோதரனின் வாழ்த்து
இந்த கடிதத்தை பார்த்து நெகிழ்ந்து போன தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "அன்பு சகோதரி வானதி தேவி கடிதம் கிடைக்கப்பெற்றேன், தங்கள் கணவர் அவில்தார் பழனி அவர்களின் தியாகம் அளப்பரியது. உங்களுக்கான உதவிகளை செய்வதில் எனக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது. இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் எப்போதும் தங்களுக்கு உண்டு' என்று கூறியுள்ளார்.