சல்லி சல்லியாக நொறுங்கிய ஓபிஎஸ் கனவு.. எடப்பாடிக்கு எத்தனை மா.செ.க்கள் ஆதரவு தெரியுமா?
அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் பலரின் ஆதரவை வசமாக்கியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் அதிமுகவில் உள்ள பல மாவட்ட செயலாளர்களை தனது வசமாக்கியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் தன் வசம் சிலர் மட்டுமே இருப்பதால் தொண்டர்களை தன் வசப்படுத்த முயற்சி செய்கிறாராம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை தலைமையால் அதிமுகவில் உட்கட்சி நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒற்றை தலைமை என்கிற முழக்கும் அதிமுகவில் மீண்டும் எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என்று ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில் நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தங்களின் முழு ஆதரவு என்பதனை வெளிப்படுத்தினர். அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் கூடிய தொண்டர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

தனித்தனியாக ஆலோசனை
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒற்றைத்தலைமை பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் இன்று 5வது நாளாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஓபிஎஸ் நிராகரிப்பு
ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். இரட்டை தலைமைதான் வேண்டும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நிலைப்பாடு. அதிமுக கட்சியை பிளவுபடுத்த எடப்பாடி அணியினர் சதி செய்வதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் கொறடா ராஜேந்திரனுடன் ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
இன்று காலை முதல் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியம், எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டாலும், பிரதானமாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியே அனைவரும் பேசியுள்ளனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் வாக்கெடுப்பு மூலமாக தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதையும் ஏற்க தயார் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒற்றைத்தலைமைக்கு எதிர்ப்பு
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகைச் செல்வன், வேளச்சேரி அசோக் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இரட்டை தலைமையே இருக்கலாம் என்றும் பேசியுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் முடிவு
இன்றைய தினம் தீர்மான குழு கூட்டத்தில் பங்கேற்றார் ஓ.பன்னீர் செல்வம். தீர்மானங்கள் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கூட்டம் முடிந்த பிறகு பேசிய ஜெயக்குமார் தனக்கு பதவி வெறி இல்லை என்றும் தொண்டர்களோடு தொண்டனாக இருந்து திமுக அரசை எதிர்ப்பேன் என்று சொன்னார். ஒற்றையா இரட்டையா என்பதை மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்வார்கள் என்றும் ஒரு பட்டாசை கொளுத்திப்போட்டிருக்கிறார்.

யாருக்கு எத்தனை பேர்
இன்றைய தினம் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பலத்தை நிரூபிக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர் அதற்காகவே தொலைபேசி மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில் அதிமுகவில் மொத்தமுள்ள 75 பேரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64
பேரும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 பேர் மட்டுமே ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications