அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா? எடப்பாடி சொன்ன வார்த்தை.. ராஜ்ய சபா சீட் குறித்தும் உறுதி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக தங்களுடனான கூட்டணியில் தொடர்வார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். தேமுதிக கேட்ட ராஜ்யசபா உறுப்பினர் பதவி 2026ல் அளிக்கப்படும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பிரச்சனை உருவாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தார். கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்தார்.

இதனிடையே அதிமுக உடன் கூட்டணி அமைக்க ஒரு பிரம்மாண்ட கட்சி வருகிறது என்று ஆச்சரியம் கொடுத்தார். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விடப் பெரியக் கட்சி எதுவும் இல்லை. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே பிரம்மாண்ட கட்சி என்று கூறியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தேமுதிக பொருளாளர் சுதீஷ் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் நட்பு பாராட்டி இருந்தார். அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திமுகவை விமர்சிப்பதைக் குறைத்துவிட்டார். அதேபோல் அதிமுகவுடன் நெருக்கம் காட்டுவதில்லை.
இதற்கு அதிமுக தரப்பில் கொடுப்பதாக இருந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்காததே காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதிமுக தரப்பில் 2026ல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இருந்தாலும் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஜனவரி தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேமுதிக எங்களுடன் பயணித்து வந்தவர்கள். அவர்கள் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அளிப்பதாக இருந்த ராஜ்ய சபா சீட் 2026ல் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவில் எத்தனை கட்சிகள் வந்தாலும் தொகுதிப் பங்கீடு எளிதாக முடிந்துவிடும்.
2021 சட்டசபைத் தேர்தலின் போது இப்படித்தான் பேசி வந்தார்கள். ஆனாலும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்க தொடங்கிவிட்டார்கள். அதனால் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுகவுக்குத் தான் சிக்கல் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அழைப்பு விடுக்கப்பட்ட எந்தக் கட்சியும் இதுவரை கூட்டணிக்கு வரவில்லை. அதனால் ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகளைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தேமுதிக குறித்து இப்படிப் பேசி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications