சூப்பர்.. தலையை விட்டா கழுத்து! அமமுகவை வைத்து எஸ்கேப்பாகும் எடப்பாடி! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வைத்து பாஜக கூட்டணியில் இருந்து விலக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் இரு வெற்றி கிடைக்கும் என அவர் கருதுவதாகக் கூறுகின்றனர் சேலம் நிர்வாகிகள்.
அதிமுகவில் ஜெயலலிதா போல வர வேண்டுமென எடப்பாடி பழனிசாமி நினைக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதாகச் சாத்தியப்படக்கூடிய நிகழ்வில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆனால் அதனை எப்படியும் நிறைவேற்றி காட்ட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறது. முதலில் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து டிடிவி தினகரன் சசிகலா என எதிர்ப்புகளை சேர்த்து வந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது பாஜக எதிர்ப்பையும் பெற்று வருகிறார்.

டிடிவி தினகரன்
இதனிடையே கடந்த சில வருடங்களாக பாஜகவுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த டிடிவி தினகரன் தற்போது இணக்கமாக செயல்படுவது போல பேசி வருவது பாஜக தலைமையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுகவை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்க்க தயார் என வெளிப்படையாக பேசியபோதும் அதனை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை. மேலும் டிடிவி தினகரன் ஒரு சதவீதம் கூட அதிமுகவில் இடமில்லை என முற்றாக மறுத்துவிட்டார்.

பாஜக தலைமை
இதனால் டிடிவி தினகரனும் பாஜக தலைமையும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வைத்து பாஜக தலைமையிடம் இருந்து விலகுவதற்கான திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வகுத்துள்ளது. அதன்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினால் அதனை வைத்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளலாம். கடந்த காலங்களில் பாஜக தலைமையில் பிடியில் சிக்கி கசப்பான அனுபவங்களை பெற்ற நிலையில் டிடிவி தினகரன் பாஜக தரப்பில் சேர்த்து விட்டு தான் விலகிக் கொண்டால் தினகரனுக்கு நெருக்கடி ஏற்படும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு ஆகியவை வெளிவந்த பின்பு பாஜக தலைமையிடம் இருந்து விலகும் முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவிடமிருந்து விலகிச் சென்றால் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். ஏற்கனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஆதரவாளர்கள் இல்லங்களில் சோதனை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விவகாரங்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது.

என்ன நடக்கும்?
இந்நிலையில் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பது தெரிந்தும் பாஜக எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை எடுக்க தயாராகி வருவதாக கூறுகின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். அதே நேரத்தில் அதிமுகவை அவ்வளவு எளிதாக விட்டுவிட பாஜக தலைமை தயாராக இல்லை. முடிந்தவரை எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை இணைக்க முயல்வோம். இல்லையெனில் எடப்பாடி உடனேயே கூட்டணியை தொடரலாம் என நினைப்பதாகவும் கூறுகின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள். சசிகலா ஓபிஎஸ்-க்கு குறிப்பிட்ட இடங்களில் செல்வாக்கு இருந்தாலும் தமிழக முழுவதும் இல்லை.

ஓபிஎஸ்க்கு சிக்கல்?
ஆனால் எடப்பாடி தரப்புக்கு கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட செல்வாக்கும் தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு செல்வாக்கும் உள்ளது எனவே பாஜக தலைமையும் அவ்வளவு எளிதாக எடப்பாடி தரப்பிலிருந்து விலகிச் செல்லாது. இது போன்ற இடியாப்ப சிக்கல்களை அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான விவகாரங்கள் இன்னும் பல கட்ட நகர்வுகளை சந்திக்கும் எனவே கூறப்படுகிறது. இதனால் பாஜக அதிமுக கூட்டணிக்காக ஓபிஎஸ் கைவிடப்படவும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications