EXCLUSIVE: தூக்கியடிச்சுருவேன்.. சீனியர்களுக்கு வாய்ப்பூட்டு! மா.செ கூட்டத்தில் எடப்பாடி ஸ்ட்ரிக்ட்
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சற்று கடுமையாகவே பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில் கூட்டணி குறித்து பிற விவகாரங்கள் குறித்து பேசவே கூடாது என சீனியர்களுக்கு கண்டிப்பான உத்தரவை போட்டிருக்கிறார். மீறினால் சீனியர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் சில தகவல்கள் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
ஆளுநர் உரை புறக்கணிப்பு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
தேர்தலில் வழக்கம் போல் முதல் கட்சியாக திமுக வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. ஆளும் கட்சி என்ற பலம், கூட்டணி கட்சிகள் ஆதரவு, ஏற்கனவே வென்ற தொகுதி என பலத்த எதிர்பார்ப்புகளோடு சந்திரகுமாரை திமுக வேட்பாளராக அறிவித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியில்லை என விலகிக் கொண்டுள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இதை அறிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தவிர்த்து 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கட்சியின் சீனியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
சீனியர்களுக்கு உத்தரவு:
குறிப்பாக சீனியர்கள் பொது வெளியில் பேசும் போதும், செய்தியாளர்களை சந்திக்கும் போதும் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என கூறியிருக்கிறார். வரும் தை மாதத்தில் கோவையிலிருந்து சுற்றுப்பயணம் தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாளில் மூன்று தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். இப்படியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் எடப்பாடி.
கூட்டணி குறித்து பேசக் கூடாது:
அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் சீனியர்கள் கூட்டணி குறித்தோ, பிற கட்சிகள் குறித்தோ பேசக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மூத்த நிர்வாகிகள் உட்பட யாரும் கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டணி பற்றி பேசினால் கட்சி நடவடிக்கை பாயும் என கடுமையாகவே பேசி இருக்கிறார்.
மக்களை சந்திக்க வேண்டும்:
மேலும் 27 வயதுக்குள் இருப்பவர்களை மாணவர் அணியில் சேர்க்க வேண்டும், அனைத்து கிளைகளிலும் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டியை விரைவாக அமைக்க வேண்டும், பொது மக்களை வீடு வீடாக சென்று சந்திக்க வேண்டும், திமுகவின் நிர்வாக சீர்கேட்டை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்ற திட்டங்களை திமுக முடக்கி இருப்பதை நினைவூட்ட வேண்டும் என கூறி இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல்:
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் வாக்கு வங்கி 5% அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அதனை சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும், தேவையான கூட்டணி அமைக்கப்படும் யாரும் அவசரப்பட வேண்டாம் என பேசி இருக்கிறார். இந்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications