6 மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சி.. ஊராட்சி தேர்தலில் படு தோல்வி.. கேள்விக்குறியாகிறதா எடப்பாடி தலைமை?
சென்னை: தமிழ்நாட்டில், 6 மாதங்கள் முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தமிழகம் முழுக்க உள்ள பரவலமான மக்களால் ஏற்கப்படவில்லையா என்ற சந்தேகங்களை இந்த தேர்தல் ரிசல்ட் எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகவும் இவரே களம் கண்டார். அந்த தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளை வென்றது. கூட்டணி கட்சியான பாஜக 4, பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளை வென்றன.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
திமுக 133 தொகுதிகளில் வென்றது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 18, விடுதலை சிறுத்தைகள் 4, இ.கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இடைத் தேர்தல்
அதேநேரம், அதிமுக கூட்டணி 33.29 சதவீதம் ஓட்டுக்களையும், திமுக 37.70 சதவீதம் வாக்குகளையும் பெற்றிருந்தன. வாக்கு சதவீதம், 4 சதவீதம் மட்டும்தான் என்பதால் இது ஒரு பெரிய தோல்வி இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், இப்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளன. ஆளும் கட்சி என்பதால் திமுக கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப் போட்டுள்ளார்கள் என்று கடந்து போய் விட முடியாது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மிக்க, கொங்கு மண்டலத்தில் கூட இப்போது நடந்த இடைத் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப் பற்றியுள்ளது.
தேர்தல் நிலவரம்
மாவட்ட கவுன்சிலர்களுக்கான 140 இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 77 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலருக்கான 1381 இடங்களில், திமுக கூட்டணி 252 இடங்களிலும், அதிமுக 32 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. திருநெல்வேலி போன்ற தென் மாவட்டத்தில் 28 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில் அதிமுக எதிலும் முன்னிலை பெறவில்லை. அமமுக கூட 1 இடத்தில் முன்னிலை பெற்றிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம்
வட மாவட்டமான ராணிப்பேட்டை.. அதாவது எடப்பாடி முதல்வராக இருந்தபோது பிரிக்கப்பட்ட மாவட்டம்.. நிலவரத்தை பார்த்தால் அங்கும் அதிமுக நிலைமை மோசமாக உள்ளது. ஒன்றிய கவுன்சிலர்கள் ரிசல்ட்டில் திமுக கூட்டணி 35 இடங்களையும், பாமக 4 இடங்களையும் கைப்பற்றும் வாய்ப்புடன் இருந்த நிலையில், அதிமுக எதிலுமே முன்னிலை பெறவில்லை. வேலூரில் திமுக 29, அதிமுக 4 என்ற அளவில் இருந்தன. கள்ளக்குறிச்சியில் 25 திமுக என்றால் வெறும் 1 மட்டுமே அதிமுக முன்னிலையில் இருந்தது.
தேர்தல் நடந்த மாவட்டங்கள்
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள்தான் இன்று வெளியாகியுள்ளன. இது தவிர ஒரு சில மாவட்டங்களில் இடைத் தேர்தல்களும் நடைபெற்று முடிவு வெளியாகியுள்ளன.
முழுமையான தலைவராக வளரவில்லையா எடப்பாடி
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 44 தொகுதிகளை கொங்கு மண்டலத்தில் கைப்பற்றியது. அந்த ஒரு மண்டலம்தான் அதிமுகவை காப்பாற்றியது. இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலும் பிற மண்டலங்களில் அதிமுக செல்வாக்கை இழந்து விட்டதை காட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை தாண்டிய மொத்த தமிழகத்திற்குமான தலைவராக வளரவில்லை என்பதையும், அதேநேரம், ஸ்டாலின் அதில் சாதித்து விட்டார் என்பதையும் இந்த ரிசல்ட் காட்டுகிறது. கருணாநிதிக்கு பிறகு தமிழகம் முழுக்க செல்வாக்கை தக்க வைப்பதில் ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடி தமிழகம் முழுமைக்குமான தலைவராக வார்த்தெடுக்கப்படவில்லை.
எடப்பாடி திட்டம்
தென் மாவட்டங்களிலும், டெல்டாவிலும் முக்குலத்தோர் ஓட்டுக்கள் வழக்கமாக அதிமுகவிற்கு சென்றன. ஆனால் சசிகலா, தினகரன் தனி அணியான பிறகு அதில் பெரிய ஓட்டை விழுந்தது. இதை ஈடுகட்ட வடக்கு மண்டலத்தில் வன்னியர்கள் ஓட்டுக்களை அதிமுகவிற்கு கொண்டுவரும் முயற்சியாக பாமகவை அதிமுக கூட்டணியில் தக்க வைப்பதில் பெரும் முயற்சி எடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் என வடக்கு மண்டலத்திலும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.