அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லேப்டாப் வழங்குவோம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தென்காசி: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியைப் பொதுமக்கள் பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டுவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டத்தில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சியில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

2 முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கினோம். குடிமராமத்துப் பணிகள் மூலமாக குளங்கள் தூர் வாரப்பட்டன. பேரிடர் காரணமாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலமாக இழப்பீடுகளை பெற்றுக் கொடுத்தோம். விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அதிமுக ஆட்சியில் நிவாரணம் அளிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் ஒரு திட்டமாவது விவசாயிகளுக்கு கொண்டு வரப்பட்டதா? அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் திமுக தடுத்து நிறுத்தியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது.
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியை பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டுகிறார்கள். அதிகளவிலான கல்லூரிகளை திறக்கப்பட்டு சாதனை படைத்தோம். மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் என்று ஏராளமான கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அதிமுக அரசு ஒரு எடுத்துக்காட்டாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச லேப்டாப் திட்டத்தை நிறுத்தினர்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 52 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல் மீண்டும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்படும். திமுக ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 7 மாதங்கள் மட்டும்தான். அதனால் வீட்டில் உள்ளவர்களை பற்றியே ஸ்டாலினுக்கு கவலை. மக்கள் பிரச்சனைகள் பற்றி கவலையில்லை என்று தெரிவித்தார்.
மேலும் இலவச லேப்டாப் திட்டம் 2018ஆம் ஆண்டே நிதி பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. 2018 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இலவச லேப்டாப் திட்டம் பொருளாதாரப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்னும் 2 மாதங்களில் 20 லட்சம் லேப்டாப் வழங்க தமிழக அரசு முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications